காதலர் தினம்.. வெட்கத்துடன் சிரித்த அண்ணாமலை.. அப்புறம் சொன்னதுதான் ஹைலைட்டே!
கோவை: காதலர் தினம் பற்றி செய்தியாளர்கள் கேட்க, "என்னுடைய திருமணம் கூட காதல் திருமணம் தான்" என வெட்கத்துடன் சிரித்தபடி கூறினார் அண்ணாமலை. அதன் பிறகு சொன்னதுதான் ஹைலைட்.
பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தையொட்டி, காதலர்கள் சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களில் சந்தித்து காதலைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். காதலர் தினத்தன்று காதலர்கள் பரிசாக ஒருவொருக்கொருவர் ரோஜாப் பூக்களை கொடுத்து மகிழ்வார்கள். வாழ்த்து அட்டைகள், சாக்லேட், பொம்மைகள் உள்ளிட்ட விதவிதமான பரிசுப் பொருட்களை வாங்கி பரிசாக அளித்து, தங்கள் காதலை தெரிவிப்பார்கள்.

இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் காதலர் தினம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். லோக்சபா தேர்தல் பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பயங்கர பிஸியாக இருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் காதலர் தினம் பற்றி கேட்டதும், வெட்கப்பட்டுச் சிரித்தபடி பதில் கூறினார்.
"இளைஞர்களுக்கு எப்போதும் எனது வாழ்த்து இருக்கும். அவர்களுக்குப் பிடித்த ஆணோ பெண்ணோ காதலைப் பகிர்ந்து, எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். அவரவர் வாழ்க்கைத் துணையை அவரவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். என்னுடைய திருமணம் கூட ஒரு புரிந்த காதல் திருமணம் தான். அதனால் எல்லோரும் காதலித்து நன்றாக இருக்கட்டும்.
ஆனால், எங்களுடைய அன்பான வேண்டுகோள் என்னவென்றால் காதல் திருமணங்கள் திமுக - காங்கிரஸ் போல் இருக்கக்கூடாது. காதல் திருமணங்கள் மோடி + பாஜக போல் இருக்கவேண்டும்." எனப் பதில் அளித்தார் அண்ணாமலை.
முன்னதாக இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. கோவை தொகுதியில் நான் போட்டியிடமாட்டேன். எனக்கு பாஜகவின் மாநில தலைவராக பணிகளை செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அண்ணாமலை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications