ஜார்க்கண்ட் ஆளுநரான சிபி ராதாகிருஷ்ணன்.. கோவை லோக்சபா சீட் ரேஸில் அண்ணாமலை, வானதி சீனிவாசன்!
கோவை லோக்சபா சீட் ரேஸில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் பெயர்கள் விவாதிக்கப்படுகின்றன.
கோவை: ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜகவின் கோவை முகமான சி.பி. ராதாகிருஷ்ணன் எனும் சிபிஆர் நியமிக்கப்பட்டுவிட்டார். இதனைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கோவை தொகுதியை தட்டிப் பறிக்கப் போவது யார் என்கிற விவாதம் பாஜகவில் பரபரக்க தொடங்கிவிட்டது.
கோவை சிபிஆர் எனும் சிபி ராதாகிருஷ்ணன்.. 1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்று அசர வைத்தார். அந்த தேர்தலில் திமுகவின் கே.ஆர். சுப்பையனை 1,44,676 வாக்குகளில் வீழ்த்தி லோக்சபா எம்பியானார் சிபிஆர்.

1999-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மீண்டும் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கினார் சிபிஆர். அப்போது கோவை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான விடுதலைப் போராட்ட வீரர் இரா.நல்லகண்ணு போட்டியிட்டார். இந்த தேர்தலில் இரா.நல்லகண்ணுவை 54,077 வாக்குகளில் தோற்கடித்து பெரும் பேசுபொருளாகினார்.
பின்னர் 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல், 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல், 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 2014-ம் ஆண்டு நாடு முழுவதும் மோடி அலை வீசிய போது கோவை தொகுதியில் 42,016 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். ஆனால் 2019-ம் ஆண்டு 1,79,143 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
கோவை லோக்சபா தொகுதியை பாஜகவுக்கு நம்பிக்கை தரக் கூடிய ஒரு தொகுதியாக வளர்த்தெடுத்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். மத்திய அரசின் கயிறு வாரியத் தலைவர் பதவியையும் பெற்றார். இந்த நிலையில் தற்போது சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கோவை லோக்சபா தொகுதியை பெறப் போவது யார்? என்ற விவாதம் பாஜகவில் அனல்பறக்கிறது.
கோவை பாஜகவின் இருமுகங்களாக இருப்பவர்கள்தான் சிபிஆரும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.வும். கோவை தெற்கு சட்டசபையில் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை தோற்கடித்தவர். பாஜகவின் அகில இந்திய மகளிர் அணி தலைவராக இருப்பவர். இதனால் லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியை வானதி சீனிவாசன் நிச்சயம் கேட்டு பெறுவார்; மத்திய அமைச்சராவார் என நம்பிக்கையுடன் சொல்கின்றனர் வானதி சீனிவாசனின் ஆதரவாளர்கள்.
ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவராக பதவியேற்றது முதல் ஆளும் திமுகவுக்கு எதிரான வலிமையான எதிர்க்கட்சியாக பாஜகவை உருவாக்கியவர் அண்ணாமலை. அதனால் அவருக்குதான் நிச்சயம் கோவை தொகுதியை பாஜக மேலிடம் வழங்கும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதனை முன்வைத்து இப்போது பாஜகவில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications