அத்திக்கடவு அவினாசி திட்டம்: எடப்பாடி பழனிசாமிக்கு இன்று விவசாயிகள் பாராட்டு விழா- குஷியில் அதிமுக!
கோவை: அத்திக்கடவு- அவினிசாமி திட்டத்தை நிறைவேற்ற அடிக்கல் நாட்டியதற்காக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு இன்று அன்னூரில் விவசாயிகள் பாராட்டு விழா நடத்துகின்றனர். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்துவது என்பது மேற்கு மண்டலத்தில் அதிமுக தமது வாக்கு வங்கியை தக்க வைக்கும் வியூகம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அத்திக்கடவு- அவினாசி திட்டம் என்பது மேற்கு மாவட்டங்களில் மிக முக்கியமான கோரிக்கையாக இருந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரம்பி இருக்கின்றன.

இந்த நிலையில் தங்களது 60 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி நிறைவேற காரணமாக இருந்ததால் முதல்வர் பதவியில் இல்லாத நிலையில் அதிமுக பொதுச்செயலாளரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று விவசாயிகள் பாராட்டு விழா நடத்துகின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூர்- அவினாசி சாலை கஞ்சப்பளளி பிரிவு அருகே எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பாராட்டு தெரிவிக்கும் விழா நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் களப் பணிகள்
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஒவ்வொரு பகுதியிலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கிவிட்டன. அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்ற மதுரை அரிட்டாப்பட்டி கிராமத்துக்கு நேரில் சென்று பாராட்டுகளை ஏற்றுக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக தற்போது அதிமுகவும் மேற்கு மண்டல வாக்குகளை தக்க வைக்க அத்திக்கடவு- அவினாசி குடிநீர் திட்டம் எனும் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இது அந்த பகுதி அதிமுகவினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது. மேற்கு மாவட்டங்கள் அதிமுகவின் பிரதான வாக்கு வங்கியாக இருந்து வருகிறது. இதனை மேலும் வலுவாக்கிக் கொள்ளவும் உறுதி செய்யவுமே தற்போதைய பாராட்டு விழா நடத்தப்படுகிறது என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான்.












Click it and Unblock the Notifications