கோவை-பெங்களூர் வந்தே பாரத் ரயில்.. மார்ச் 11 முதல் இனி இப்படித்தான் போகும்.. சூப்பர் அப்டேட்
கோவை: கோவை-பெங்களூர் வந்தே பாரத் ரயில் நேரம் வரும் மார்ச் 11 ம் தேதி முதல் மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் எப்போது வரும் என்பது குறித்து விரிவான தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் கொண்டு வர அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இந்த ரயில்கள் எல்லாம் பகல் நேர ரயில்கள் ஆகும். இதில் ஒரு ஊரில் காலையில் ஏறி மதியம் தொலைதூரத்தில் உள்ள இன்னொரு ஊருக்கு போய்விட முடியும். வேலை முடிந்து மீண்டும் அதே ரயிலில் ஏறி, தங்கள் ஊருக்கு வந்துவிட முடியும். அவ்வளவு வேகமாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன,

தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை-கோவை, சென்னை-திருநெல்வேலி, சென்னை-மைசூர் (பெங்களூர் வழியாக), கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயிலும் இடையே இயக்கப்படுகிறது. கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தற்போது தினமும் காலை 5 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூர் நகரத்திற்கு காலை 11.30 மணிக்கு சென்றடைகிறது. அதன் பின்னர் பிற்பகல் 1:40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணி அளவில் கோவை திரும்புகிறது.
கோவை பெங்களூர் இடையே இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயில் டிக்கெட் கட்டணம், சாதாரண பெட்டியில் ஒரு நபருக்கு ரூ.1,025ம், சிறப்பு சொகுசு பெட்டியில் ஒரு நபருக்கு ரூ.1,910ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோவை டூ பெங்களூர் வழித்தடத்தில் ஏற்கனவே செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் குறைந்தபட்ச நேரமாக கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு செல்ல 6 மணி நேரம் 45 நிமிடம் எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில் புதிய வந்தே பாரத் ரயில் 6.25 நிமிடத்தில் போய் வருகிறது.
தனியார் ஆம்னி பேருந்துகளில் கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் செல்ல 7 முதல் 8 மணி நேரம் ஆகிறது. இந்த வந்தே பாரத் ரயில் தான் மிகக் குறைவான நேரத்தில் பெங்களூர் போக முடியும் என்பதால் வரவேற்பு அதிகமாக உள்ளது.. அதேபோல் சேலத்தில் இருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் செல்வதால் ரயிலுக்கு வரவேற்பு நன்றாகவே உள்ளது.
அதேநேரம் கோவையில் இருந்து வந்தே பாரத் ரயில் புறப்படும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோவை மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர் கோவை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்படுவதால், இந்த நேரத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து புறப்பட்டு கோவை ரயில் நிலையத்தை சென்றடைவது கடினம் என்று மக்கள் தெரிவித்தனர்.
மேலும் பேருந்து, ஆட்டோ, கால் டாக்ஸி என எதுவும் அந்த நேரத்தில் இருக்காது என்பதால், அதிகாலை 5 மணிக்கு என்பதற்கு பதிலாக காலை 6 மணிக்கு மேல் புறப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினரின் இந்த கோரிக்கை டெல்லியில் உள்ள ரயில்வே போர்டிடம் கொண்டு செல்லப்பட்டது. இதை பரிசீலித்த ரயில்வே போர்டு, கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயில் நேரத்தை மாற்றியமைக்க ஒப்புக்கொண்டது. அதன்படி கோவை-பெங்களூர் வந்தே பாரத் ரயில் நேரம் வரும் மார்ச் 11 ம் தேதி முதல் மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கோவை-பெங்களூரு இடையே இயக்கப்படும் (20642) வந்தே பாரத் ரயில் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது. முன்பு கோவையில் இருந்து காலை 5 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டது. இனி வருகிற 11-ந் தேதி முதல் காலை 7.25 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அது, காலை 8.03 மணிக்கு திருப்பூர், 8.42 மணிக்கு ஈரோடு, 9.32 மணிக்கு சேலம், 10.51 மணிக்கு தர்மபுரி, 12.03 மணிக்கு ஒசூர் சென்றடையும். பகல் 1.50 மணிக்கு பெங்களூருவை சென்றடையும்.
இதேபோல் பெங்களூருவில் இருந்து வந்தேபாரத் ரயில் (20641) முன்பு பகல் 1.40 மணிக்கு புறப்படும். அது வருகிற 11-ந் தேதி முதல் பெங்களூருவில் இருந்து பகல் 2.20 மணிக்கு புறப்படும். அந்த ரெயில், 3.10 மணிக்கு ஒசூர், 4.22 மணிக்கு தர்மபுரி, மாலை 5.57 மணிக்கு சேலம், 6.47 மணிக்கு ஈரோடு, 7.31 மணிக்கு திருப்பூர், இரவு 8.45 மணிக்கு கோவைக்கு வந்து சேருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications