அரசு சலுகைகளில் பாரபட்சம்! பாரதியார் பல்கலைக்கழகத்தில்.. வெடிக்கும் உள்ளிருப்பு போராட்டம்!
கோயம்புத்தூர்: கடைநிலை ஊழியர்களுக்கு தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவித்திருக்கிறது. ஆனால் அரசு துறைகளில் தற்காலிக பணியாளர்களுக்கு இன்னும் நிலுவை ஊதியமே வழங்கப்படாத நிலை இருக்கிறது. குறிப்பாக பாரதியார் பல்கலைக்கழகத்தில் நிலுவை ஊதியம் மற்றும் தீபாவளி முன்பணம் உள்ளிட்டவை கேட்டு, தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.
இது குறித்து பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான எம்.ரமேஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "இன்று எங்களது தொழிற்சங்கம் சார்பாக அவசர பொதுக்குழு கூட்டம் நடந்து நடத்தப்பட்டிருக்கிறது. கூட்டத்தின் நோக்கம் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10-13 நாட்டிலே இருக்கும் நிலையில் வருடா வருடம் எங்களுக்கு கொடுக்கக்கூடிய பிடித்தம் செய்யும் வகையிலான தீபாவளி முன்பணம் உடனடியாக கொடுக்க வேண்டும் என்பதுதான்.

கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் தீபாவளி முன்பணத்தை வாங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த ஆண்டு இன்னும் இந்த பணம் வழங்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து பதிவாளர் கூறுகையில், 6ம் தேதிக்குள் வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். தீபாவளி முன்பணம் மட்டுமல்லாது, 7 மாதத்திற்கான நிலுவைத் தொகை, பொங்கல் போனஸ் என அனைத்தும் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே பணப்பலன்கள் வழங்கப்படும் என்று இன்று காலை சுற்றறிக்கை விடப்பட்டிருக்கிறது.
தற்காலிக தொழிலாளர்களுக்கு எந்த பலனும் கிடைக்கக்கூடாது என்று நிதி அலுவலர் உட்பட, நிதி அலுவலகத்தில் உள்ளவர்கள் பலரும் திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள். அவர்களை மாற்றம் செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து போராடி வந்தோம். இதுவரை யாரும் மாற்றப்படவில்லை. டி.ஆர்.கனகராஜ், ஏஎஸ்ஓ சதாசிவம், டிஓ மோகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், தொழிலாளர் நல விரோத மனப்பான்மையில் இருக்கின்றனர். "இந்த அத்துக்கூலிக்கெல்லாம் நாம் ஏன் செய்ய வேண்டும்?" என்று பேசுகிறார்கள்.
தொழிலாளர்களை ஒரு மனிதராக கூட மதிக்க முடியாத நிலை, சமூக நீதி இல்லாத நிலை இங்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனையில் அரசு தலையீடு செய்து, எங்களுக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும். அதிகாரம் பேசுபவர்கள் ஏன் எங்கள் உழைப்புக்கான பணத்தை தர மறுக்கிறீர்கள்? எங்களுக்கான அனைத்து பணபலன்களையும் விடுவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அக்.10ம் தேதி மாலை 5 மணி முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும். இது பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications