அக்காடா.. தம்பிடா.. வானதி சீனிவாசனுடன் ஒரே பைக்கில் அண்ணாமலை பிரச்சாரம்!
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். கோவையில் திமுக, தேஜகூட்டணி இடையே கடும் மோதல் உருவாகி வருகிறது. மறுபக்கம் பாஜகவில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் இடையே பனிப்போர் இருப்பதாக கூறப்பட்டது. கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனை பைக்கில் அமரவைத்து பேரணி சென்றார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை ஓய்வடைய உள்ள நிலையில், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். வானதி சீனிவாசனை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை கோவை வடக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.

கோவை வடக்கு பாஜக பேரணி
அப்போது பாஜகவினர் இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனர். கணபதி சிவசக்தி காலனியில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் இந்த பேரணியில் ஈடுபட்டனர். வடக்கு தொகுதியின் முக்கிய பகுதிகளான பாரதி நகர், விளாங்குறிச்சி சாலை, மணியகாரம்பாளையம், கண்ணப்பன் நகர், மற்றும் கிருஷ்ணம்மாள் சாலை வழியாக பேரணி சென்றனர்.
தொடர்ந்து அவர்கள் சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலை, கோகுலம் காலனி, வீரகேரளம் வழியாக வடவள்ளி பேருந்து நிலையம் வரை இந்தப் பேரணி நடைபெற்றது. வானதி சீனிவாசனை பின்னால் அமரவைத்தபடி அண்ணாமலை ஸ்கூட்டரை இயக்கினார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கேட்டபடி அவர்கள் வானத்தில் சென்றனர்.
வானதி கடும் தாக்கு
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், "கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் போலவே கோவை மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும். கோவை மாவட்ட மக்கள் யார் வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் வேலை செய்வார்கள் என்பதில் தெளிவு பெற்றவர்கள். கடந்த இரண்டு நாட்களாக கோவையில் கரூர் ரவுடி கும்பல் காவல் துறையினரையே மிரட்டுகிறார்கள்.
காவல் நிலையத்தில் ரகளை செய்வது, எதிர்க்கட்சியினரை தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். கோவையை கொள்ளை அடிப்பதற்காக ஸ்டாலினால் அனுப்பப்பட்ட செந்தில் பாலாஜியின் ஆட்கள் அதனை அரங்கேற்றுகிறார்கள். கோவை மக்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள். திமுகவினர் இந்த வடக்கு தொகுதியில் ஒரு வாக்குக்கு ரூ. 2,500 செந்தில் பாலாஜி போட்டியிடும் தெற்கு தொகுதியில் ரூ.5.000 வழங்குகிறார்கள்.
செந்தில் பாலாஜி மீது விமர்சனம்
அந்த பணம் எங்கிருந்து வந்தது. டாஸ்மாக்கில் கொள்ளையடித்தும், மணல் மாஃபியா மூலம் கொள்ளையடியத்தும் கொண்டு வரப்பட்ட பணம் அது. கோவையை கெடுப்பதற்காகவே திட்டமிட்டு கோவையை பழிவாங்குவதற்காகவே முதலமைச்சர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அனுப்பி இந்த வித்தையை காட்டிக் கொண்டிருக்கிறார்
கோவை மக்கள் ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் பாடம் புகட்டுவார்கள். போதைப் பொருளால் ஆதாயம் அடைந்து அந்த பணத்தைக் கொண்டு எதிர்கால சந்ததியை தொலைத்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் சிந்தித்து தெளிவாக வாக்களிக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications