கோவை கார் வெடி விபத்து.. தமிழக அரசை கண்டித்து அக்.31ல் பந்த்.. வியாபாரிகளுக்கு பாஜக அழைப்பு!
கோவை: தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் கோவையில் அக்.31ம் தேதி பந்த்-ற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு வழியாக கடந்த 23-ம் தேதி அதிகாலை 4.10 மணி அளவில் சென்ற மாருதி கார், சங்கமேஸ்வரர் கோயில் முன்புள்ள வேகத் தடையை கடந்தபோது திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காரில் இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததும், அதில் ஒரு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை என்ஐஏ அமைப்பின் விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.

சிபி ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்த நிலையில் கோவை பாஜக அலுவலகத்தில் பாஜக கேரள மாநில பொறுப்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சிபி ராதாகிருஷ்ணன் கூறுகையில், இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் கோவையில் தலையோங்கி உள்ளது என்பது இந்த கார் சம்பவம் உணர்த்துகிறது. இச்சம்பவம் நடந்தவுடன் டிஜிபி ஆய்வு செய்ததை வரவேற்கிறோம். ஆனால் அவர் சரிவர ஆய்வு செய்யாமல் சிலிண்டர் வெடித்துள்ளது என அறிக்கை அவரது பொறுப்பிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. டிஜிபி சிலிண்டர் ஏன் வெடித்தது என்பதில் தான் கருத்தை தெரிவித்திருக்க வேண்டும்.

தமிழக காவல்துறை
இறந்து போன நபர், இஸ்லாமிய தீவிரவாதிகளின் உறவினர் என்பதை யாராலும் மறுக்க இயலாது. சிறையில் இருப்பவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதையும் மறுக்க இயலாது. தமிழக உளவுத்துறை அவரது நடவடிக்கையை கண்காணித்திருக்க வேண்டும். அவர்கள் கண்காணித்திருந்தாலும் அதில் தோல்வி அடைந்திருப்பதற்கான காரணத்தை தமிழக காவல்துறை சிந்திக்க வேண்டும். கடவுள் அருளால் மிக பெரிய விபத்து கார் வெடிப்போடு முடிந்துள்ளது.

கோவையை குறி வைப்பது ஏன்?
பயங்கரவாதிகள் கோவையை குறி வைப்பதற்கான காரணம் என்னவென்றால் கோவை சென்னைக்கு அடுத்து பொருளாதாரத்தில் இருக்கின்ற மிக பெரிய நகரம். இதை தகர்த்து எறிந்து விட்டால் அவர்களது அடுத்த குறி சென்னையாக தான் இருக்கும். காவல்துறைக்கு திமுக அரசு முழு சுதந்திரத்தை அளிக்க வேண்டும். 75 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்களுக்கு ஒன்றரை டன் இருப்பதாக தகவல் வந்துள்ளது. என்ஐஏ-வுடன் இணைந்து தமிழக காவல்துறை செயல்பட வேண்டும். தமிழக காவல்துறை என்ஐஏ-க்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பாஜக அழைப்பு
தமிழக அரசின் மெத்தன போக்கையும், தமிழக அரசு பயங்கரவாதத்தை மூட மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கண்டித்தும் பாஜக கோவை மாநகர மாவட்டம் சார்பில் அக்.31ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடத்த வேண்டுகோள் விடுக்கிறது. இதற்கு பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அனைத்து இஸ்லாமியர்களையும் நாங்கள் தீவிரவாதிகளாக பார்க்கவில்லை. இந்த பந்த் திற்கு திமுக உட்பட அதிமுக, கம்யூனிஸ்ட், விசிக, பாமக, மதிமுக என அனைத்து இயக்கங்களிடம் இருந்தும் ஆதரவு கோருகிறோம். மற்றவர்கள் இதனை முன்னெடுக்க வராத போது பாஜக தான் இதனை முன்னெடுக்க வேண்டி உள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications