கோவை அருகே பெரியார் சிலையை அவமதித்த விவகாரம்: பாஜக நிர்வாகிகள் 2 பேருக்கு ‘காப்பு’ மாட்டிய போலீசார்!
கோவை: கோவை மாவட்டம் வடசித்தூர் அருகே பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட வழக்கில், பாஜக பிரமுகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை கிணத்துக்கடவை அடுத்த வடசித்தூரில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. அங்கு உள்ள பெரியார் சிலை கம்பி வேலிக்குள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில், அந்த பெரியார் சிலை மீது யாரோ மாட்டு சாணத்தை வீசி அவமதித்து இருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சிலையின் மீது வீசப்பட்டு இருந்த சாணத்தை தண்ணீர் ஊற்றி கழுவினர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். பெரியார் சிலையை அவமதித்தவர்களை கண்டுபிடித்து சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் புகாரில் வலியுறுத்தி இருந்தனர்.
வடசித்தூரில் பெரியார் சிலை சமூக விரோதிகளால் அவமதிக்கப்பட்ட நிலையில், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என நேற்று மாலை வடசித்தூரில் அனைத்து ஜனநாயக கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட வழக்கில், பாஜக பிரமுகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாஜக பிரமுகர்கள் கோகுல், ராஜா ஆகியோரை கைது செய்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications