என் ஆபீஸுக்கு போனா கொசு அடிக்கிறதே எனக்கு வேலையா இருக்கு.. வெதும்பிய வானதி சீனிவாசன்!
கோவை: எனது சட்டமன்ற அலுவலகத்திற்குப் போனால் கொசு அடிப்பதே என்னுடைய வேலையாக இருக்கிறது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை டாடாபாத் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் 'விருட்சம்' திட்டத்தை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மரக்கன்று நட்டு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.

அப்போது பேசிய அவர், "பள்ளி குழந்தைகளுக்காக கோவை தெற்கு தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தற்போது விருட்சம் திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சியில் உள்ள 7 பள்ளிகளில் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டத்தை துவக்கி உள்ளோம். இதன் மூலம் குழந்தைகளுக்கு மரம் நடும் ஆர்வமும் பொறுப்பும் உருவாகும்" என்றார்.
தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலையின் வண்டவாளங்கள் ட்ரங்க் பெட்டியில் ஏற்றப்படும் எனக் கூறியது பற்றி பதிலளித்த வானதி சீனிவாசன், "திமுக ஃபைல்ஸ், எக்ஸ்பிரஸில் ஏறுகிறதா, ஜெட்டில் ஏறுகிறதா என்பதை பார்க்கத்தான் போகிறோம்" எனத் தெரிவித்தார்.
டெங்கு பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், "கோவை மாநகராட்சியில் கொசு மருந்து அடித்ததை பார்த்ததே இல்லை, எனது சட்டமன்ற அலுவலகத்திற்குப் போனால் கொசு அடிப்பதே என்னுடைய வேலையாக இருக்கிறது" என்றார்.
மேலும், மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், "அரசு அதிகாரிகள் தங்கள் வேலையை செய்வதற்கு முன்னரே தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர். அடிக்கடி அதிகாரிகள் மாற்றப்படுதை கைவிட வேண்டும். மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதற்கு ஆசிரியர்களே இல்லை, அடிப்படை வசதிகளும் இல்லை." என்றார்.
திரைத்துறை திமுக ஆட்சியில் செழிப்பாக இருப்பதாக அமைச்சர் ரகுபதி கூறியது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "திரைத்துறை திமுக ஆட்சியில் ஆட்சியாளர்களுக்குத்தான் செழிப்பாக உள்ளது. எந்தப் படத்தை பார்த்தாலும் ரெட் ஜெயண்ட் தான். அதை தாண்டி யாராவது படத்தை விட்டார்கள் என்றால் அவர்களுக்கு தியேட்டர் கிடைக்காது. இதற்கு லியோ திரைப்படம் ஒரு முன்னுதாரணம். ஒட்டுமொத்த திரைத்துறையையும் கையில் வைத்துள்ளனர். இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் இப்படி இருந்ததால்தான் இவர்களின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அதே தவறைத்தான் மீண்டும் செய்து வருகிறார்கள்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications