‘ஸ்டாலினின் ஓட்டு பசி.. கிறிஸ்துமஸ் விழாவில் இப்படியா பேசுவீங்க’ – சீறும் வானதி சீனிவாசன்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை முடித்து, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திருநெல்வேலியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டார். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவின் ஓட்டு பசியை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பகிரங்கரமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'எந்த மதங்கள் சார்ந்தும், எந்த பாகுபாடும் இல்லாமல் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம். திருப்பணி செய்கிறோம். இது சிலரின் கண்களை உறுத்துகிறது.

மதங்களுக்கு இடையே பாகுபாடு
தமிழ்நாட்டின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம் என்று பலர் யோசிக்கிறார்கள். மதத்தின் பெயரில் உணர்வுகளை தூண்டுபவர்களை சந்தேகப்படுங்கள். கவனமாக இருங்கள்' என வசனம் பேசியிருக்கிறார். மதங்களுக்கு இடையே பாகுபாடு பார்ப்பதும், மத உணர்வுகளைத் தூண்டி வாக்கு அறுவடை செய்வதும் திமுக என்பதுதான் கடந்த கால வரலாறு.
கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டுகிறோம். ஆனால், அவர் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம் போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் பங்கேற்பதில்லை. குறைந்தபட்சம் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்வதில்லை. இதுபற்றி சட்டமன்றத்தில் பேசினால், சபாநாயகர் அப்பாவு அவர்கள் அனுமதிப்பதில்லை. இது மதங்களுக்கு இடையிலான பாகுபாடு இல்லையா.
தைப்பூச விழாவில் பங்கேற்பாரா
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் முருகப் பெருமானின் தைப்பூசம் வருகிறது. அந்த விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் தயாரா. இந்து கோவில்களுக்கு திருப்பணி செய்வது திமுகவோ, திமுக அரசோ அல்ல. இந்துக்களின் காணிக்கையில், நன்கொடையில்தான் திருப்பணி நடக்கிறது. இந்துக்கள் தங்களது கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி கேட்க வேண்டிய அவலம் உள்ளது.
அப்படி கேட்டால் லஞ்சம் கேட்கிறார்கள். இதுதான் அனைத்து மதங்களையும் சமமாக நடத்தும் லட்சணமா. தமிழ்நாட்டின் அமைதியை சீ்ர்குலைக்க நினைப்பது திமுக அரசுதான். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்தாமல் அராஜகத்தில் ஈடுபட்டது திமுக அரசு. இதுதான் திமுகவின் மதச்சார்பின்மையா.
மக்கள் எச்சரிக்கை
கிறிஸ்துமஸ் விழாவில் கடைசியாக, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் 'SIR' பற்றி பேசி. தனது ஓட்டு பசியை வெளிப்படுத்தியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். 'சிறுபான்மை மதத்தினரின் வாக்குகளை திமுகவினர் சேர்ப்பார்கள். கவலை வேண்டாம்' என பேசியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் இனிதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
'போலி வாக்காளர்களை சேர்த்து வெற்றி பெறுவோம்' என்பதைத்தான் வெவ்வேறு வார்த்தைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூடகமாக பேசியிருக்கிறார். இது தேர்தல் ஆணைத்திற்கு விடுக்கப்பட்ட சவால் மட்டுமல்ல, மிரட்டல். கிறிஸ்துமஸ் விழாவில் இயேசு கிறிஸ்துவின் அன்பை, அவரது போதனைகளை பேசாமல், மத மோதலை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மீண்டுமொரு முறை இந்து மக்களின் விரோதி என நிரூபித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி. "என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications