பிரதமர் மோடி வந்த நேரத்தில்.. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பரபரப்பு!
கோவை: கோவையில் இன்று இயற்கை வேளாண் விவசாயிகள் கூட்டமைப்பு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி வருகை தந்த நேரத்தில் கோவையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மிரட்டல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று கோவை வருகை தந்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெற உள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை அவர் தொடங்கி வைக்கிறார். இதனால் மாநாடு நடைபெறும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொடிசியா வளாகம் பிரதமரின் தனி பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. கோவையின் முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக இமெயில் முகவரிக்கு அடையாளம் தெரியாத முகவரியில் இருந்து வந்த மின்னஞ்சல் ஒன்றில் கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வந்த இ.மெயில் குறித்து திருப்பூர் வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 7 தளங்கள் கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு கண்டறியப்படாத நிலையில் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
பிரதமர் மோடி பங்ஏற்கும் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் மற்றும் விமான நிலையத்திலும் மோப்பநாய் கொண்டு சல்லடை போட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த மின்னஞ்சல் முகவரி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி இன்று கோவை வந்துள்ள சூழலில் இதுபோன்ற மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இது பத்தாவது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டல் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இது இரண்டாவது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டல் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications