குன்னூர் பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு.. ஊட்டி சென்றுவிட்டு தென்காசி திரும்பிய போது சோகம்
நீலகிரி: குன்னூர் அருகே மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் பலியானதாகவும், 30 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு தென்காசி மாவட்டம் கடையத்திற்கு பஸ்சில் வீடு திரும்பியபோது இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால், ஊட்டியில் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. பேருந்து, வேன்கள், கார்கள் என வாகனங்களில் சாரை சரையாக அணி வகுத்து வருகின்றன. அந்த வகையில், தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து 59 பயணிகளுடன் ஊட்டிக்கு பேருந்து ஒன்று வந்துள்ளது.

ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு பேருந்தில் சுற்றுலா பயணிகள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அப்போது குன்னூர் -மேட்டுப்பாளையம் மரப்பாலம் அருகே வளைவில் திரும்பும் போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் தடுப்புச்சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்தது. சுமார் 50 அடி பள்ளத்தில் பஸ் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் இருந்த சுற்றுலாப்பயணிகள், படுகாயமடைந்து அச்சத்தில் அலறினர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீ அணைப்பு துறையினர் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதலில் இந்த விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சொல்லப்பட்டது.
ஆனால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்துவரும் நிலையில், இந்த பஸ் விபத்தில் மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக குன்னூர் மலைப்பாதையில் போக்குவரத்து சுமார் 2 மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்போது வரை மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சாரல் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.
குன்னூர் பஸ் விபத்தில் பலியானவர்கள் பெயர் விவரம் தெரியவந்துள்ளது. தேவி கலா (வயது 42), நித்யா கண்ணா (15), முருகேசன் (65), முப்பிடாதி (67), கவுசல்யா (29) ஜெயா (50), தங்கம் (40), இளங்கோ (64) ஆகிய 8 பேர் பலியாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications