பாட்டிலுக்கு ரூ.10 ஏன்? சினிமா போல் ஒரே நாளில் மாற்றிவிட முடியாது.. அமைச்சர் விக்னேஷ் ஓபன் டாக்!
கோவை: டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கும் வழக்கத்தை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் நிர்வாகத்தில் பல அதிரடியான திட்டங்கள் நடந்து வருவதாக கூறிய அமைச்சர் விக்னேஷ், நீண்ட கால தொடர் செயல்பாடுகளின் மூலமாகவே பாட்டிலுக்கு ரூ.10 வாங்கப்படுவதை நிறுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக கரூரில் பிரச்சாரத்தின் போது தவெக தலைவர் விஜய், 10 ரூபாய் செந்தில் பாலாஜி என்று ஒரு பாடலையே பாடினார். இதனால் தவெக ஆட்சி அமைந்த பின், பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்க மாட்டோம் என்று அக்கட்சியினர் கூறி வந்தனர்.

ஆனால் தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற போதும், பாட்டிலுக்கு ரூ.10 வாங்கப்படுவது தொடர்கிறது. அதுமட்டுமல்லாமல் டாஸ்மாக் ஊழியர்கள் பலரும் பாட்டிலுக்கு ரூ.10 வாங்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு விளக்கம் அளித்தனர். பாட்டில்களை கைப்பற்றி பாதுகாக்க தனி குடோன், அட்டை பெட்டிகளுக்கான செலவு, பாரில் பணியாற்றுவோருக்கு ஊதியம் என்று பல்வேறு கணக்குகளை கூறினர்.
இந்த நிலையில் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் விக்னேஷ் பேசும் போது, இப்போதும் பாட்டிலுக்கு ரூ.10 வாங்கப்படுகிறதே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் விக்னேஷ், பல வகைகளில் திருடுவதற்காக கொண்டு வரப்பட்ட விஷயம் தான் பாட்டிலுக்கு ரூ.10 விவகாரம்.
இதனை நியாயப்படுத்த டாஸ்மாக் ஊழியர்கள் சொன்ன விஷயங்களை கேட்டேன். அது அனைத்தும் உண்மை தான். மக்களிடம் இருந்து மீண்டும் பாட்டிலை வாங்கி வைப்பதற்கான இடம், மின்சார கட்டணம், வாடகை பிரச்சனை உள்ளிட்டவை இருக்கிறது. இவர்கள் அப்படி பழக்கப்படுத்தப்பட்டுள்ளார்கள். பாட்டிலுக்கு ரூ.10 வாங்கி அந்தப் பணத்திலேயே அனைத்து தேவைகளையும் செய்து கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார்கள்.
அந்த முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். விரைவில் அதிரடியான மாற்றங்கள் எல்லாம் டாஸ்மாக்கில் நடைபெறும். அதற்கான திட்டங்கள் நடந்து வருகிறது. பாட்டிலுக்கு ரூ.10 விவகாரத்தில், தவறு நடக்கவே கூடாது என்று முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். என்ன விலையோ, அந்த விலையை விட கூடுதலாக 1 ரூபாய் கூட வாங்க கூடாது என்று கூறியுள்ளார்.
சில இடங்களில் பாட்டிலை மீண்டும் கொடுத்தால் கூட பணம் கொடுப்பதில்லை. சினிமா போல் ஒரே நாளில் இதனை மாற்றிவிட முடியாது. இதற்கு நீண்ட கால உழைப்பு அவசியம். டாஸ்மாக் மதுபான விலையை திருத்தி உடனடியாக உத்தரவிட முடியாது. ஸ்டிக்கருக்கான மாற்று ஏற்பாடுகளை நிச்சயமாக டாஸ்மாக் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications