கேஸ் சிலிண்டருடன் கோவை நுகர்வோர் கோர்ட்டுக்கு வந்த சிக்கன் கடை ஓனர்.. சிக்கலில் பொதுத்துறை நிறுவனம்
கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த நிர்மல் என்பவர் அந்த பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் கோர்ட்டுக்கு சமையல் கேஸ் சிலிண்டருடன் வந்தார். அந்த சிலிண்டர் எடை குறைவாக இருந்ததாக புகார் கூறினார். தனக்கு விரைவில் நல்ல தீர்வு நீதிமன்றம் மூலம் கிடைக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
சமையல் எரிவாயுவை பொறுத்தவரை வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் 14.2 கிலோவுடனும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் 19 கிலோவுடனும் விறபனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் எடை குறைவாக இருந்தால், நுகர்வோர் நீதிமன்றத்தில் சேவை குறைபாட்டிற்காக வழக்கு தொடர முடியும். சம்பந்தபட்ட பொதுத்துறை நிறுவனத்திடம் இழப்பீடும் பெற முடியும். சீல் வைக்கப்பட்ட நிலையில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் எடை, அவர்கள் கூறியதை விட குறைவாக இருந்தால், அது சேவை குறைபாடு என்பதால், அதற்கான விலையை சம்பந்தப்பட்ட நிறுவனம் தர வேண்டியதிருக்கும். அப்படி ஒரு சிக்கலை பொதுத்துறை நிறுவனம் ஒன்று தற்போது சந்தித்துள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 43 வயதாகும் நிர்மல் அந்த பகுதியில் கோழிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு சமையல் எரிவாயு சிலிண்டருடன் வந்தார். அவர் அங்குள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு சமையல் கேஸ்சிலிண்டர் மற்றும் எடை எந்திரத்துடன் சென்று கொண்டிருந்தார்
அப்போது கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அத்துடன் அங்கு கேஸ்சிலிண்டருடன் நிர்மல் வந்ததால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சிலிண்டருடன் வருவது குறித்து நிர்மல் கூறுகையில், நான் கடந்த 25-4-2023 அன்று வீட்டுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை புக்கிங் செய்து வாங்கினேன். பொதுவாக நிறுவனங்கள் தரும் வீட்டுக்கு பயன்படுத்தும் ஒரு கேஸ் சிலிண்டரின் மொத்த எடை 30 கிலோ 100 கிராம் இருக்க வேண்டும். ஆனால் எனக்கு வழங்கப்பட்ட கேஸ் சிலிண்டர் எடை 27 கிலோ 700 கிராம் தான் இருந்தது.

இதற்கு முன்பு இதுபோன்று எனது வீட்டுக்கு 2 முறை எடை குறைவாகவே கேஸ் சிலிண்டர் வினியோகம் ஆனது. இதனால் நான் இதுகுறித்து எனக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் வினியோகஸ்தரை தொடர்பு கொண்டு கேட்டேன். அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் நான் இதுகுறித்து கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் கோவை மாவட்ட நுகர்கோர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தேன். அந்த மனு மீதான விசாரணை வந்தது. எனவே தான், நான் எடை குறைவான சமையல் கேஸ்சிலிண்டரை கோர்ட்டுக்கு ஆதாரத்துக்காக கொண்டு வந்தேன். அந்த சிலிண்டரை ஒரு ஆண்டுக்கும் மேலாக சீல் உடைக்காமல் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். எனக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்" இவ்வாறு நிர்மல் கூறினார்.












Click it and Unblock the Notifications