விளம்பரத்திற்காக நிவாரண பணிகளை மேற்கொள்ள வைத்து ஒரு எம்எல்ஏவை இழந்தது திமுக- முதல்வர் தாக்கு
கோவை: விளம்பரத்திற்காக இங்கொன்றும் அங்கொன்றுமாக நிவாரண பணிகளை மேற்கொள்ள வைத்து ஒரு எம்எல்ஏவை இழந்துள்ளது திமுக என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை. நான் சேலத்திற்கு மட்டும் முதல்வர் என எதிர்க்கட்சி தலைவர் விமர்சித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் நடத்தி வரும் ஒரே அரசியல் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான்.

ஆலோசனைகள்
தனது இருப்பை காட்டிக்கொள்வதற்காக தினந்தோறும் ஸ்டாலின் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். சோதனையான நேரத்தில் அரசுக்கு ஆதரவு அளிக்காமல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். கொரோனா பரவலைத் தடுக்க என்றைக்காவது ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கியுள்ளாரா?

கொரோனா தொற்று
அரசியல் ரீதியாக அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் ஸ்டாலின் செயல்படுகிறார். எந்த மாநிலத்திலும் எந்த ஒரு எதிர்க்கட்சித் தலைவரும் நோயை வைத்து அரசியல் செய்யவில்லை. கொரோனா தொற்று அதிகரிக்க திமுகதான் காரணம்.

அசம்பாவிதம்
விளம்பரத்திற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக நிவாரண பணிகளை திமுகவினர் மேற்கொண்டனர். மருத்துவ நிபுணர்களின் அறிவுரைகளை ஏற்காமல் திமுக விளம்பரத்திற்காக செய்த நிவாரண பணியால் இன்று ஒரு எம்எல்ஏவை இழந்துள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி நிவாரணப் பணிகளை வழங்கியிருந்தால் இன்று எம்எல்ஏவை இழக்கும் அசம்பாவிதம் நடந்திருக்காது.

கட்டுக்குள்
வியாபாரிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுமாறு போலீஸாரிடம் அறிவுறுத்தியுள்ளேன். சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பில் நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படும். கூட்டுறவு வங்கிகளை ஆர்பிஐ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது பற்றி முழு அறிக்கை கிடைக்கவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த திணறுகிறது. நாம் கட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்றார் முதல்வர்.












Click it and Unblock the Notifications