கோவையில் கொடுமை.. கருப்பு பூஞ்சையால் 30 பேர் கண் பார்வை பறிபோனது.. தப்பிக்க என்ன செய்யலாம்?
கோவை: கோவையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30 பேருக்கு கண் பார்வை பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு பூஞ்சை நோயால் கோவை மாவட்டத்தில் இதுவரை 30 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை போயுள்ள தகவலை, கோவை மாவட்ட அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
கொரோனா சிகிச்சையின்போது ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக கருப்பு அல்லது வெள்ளை பூஞ்சை போன்ற நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

சர்க்கரை அளவு ஜாக்கிரதை மக்களே
எனவே கொரோனா சிகிச்சை முடிந்த பிறகும் ரத்தத்தில் சர்க்கரை அளவு எப்படி இருக்கிறது என்பதை தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்கிறார்கள் அவர்கள். ஒருவேளை கறுப்பு பூஞ்சை நோய்க்கான சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக காது மூக்கு தொண்டை நிபுணர் அல்லது தகுதியான மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும்.

ஈரப்பதம் உஷார்
ஈரப்பதம் கொண்ட முகக் கவசங்கள் அணியக்கூடாது. நன்கு வெயிலில் காய வைத்து அதை தான் அணிய வேண்டும். இதன் மூலமாக பூஞ்சை நோய் பரவுவது தடுக்கப்படும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

30 பேருக்கு கோவையில் பார்வை போனது
கோவை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 30 பேர் நோய் முற்றிய நிலையில் வந்ததால் கண் பார்வை பறிபோய் விட்டது என்று மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். கண்களை அகற்றி அவர்கள் உயிரை காப்பாற்றிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அறிகுறிகள்
ரத்தம் கலந்த சளி வருதல், முகத்தில் வலி ஏற்படுதல், முகத்தில் மரமரப்பு போன்ற உணர்வு ஏற்படுவது, கண் வலி, பார்வைக் குறைபாடு, தலை வலி போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகள் என்று கூறப்படுகிறது.

தாமதம் கூடாது
தாமதமாக வந்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்கூட்டியே வந்திருந்தால் பார்வை இழப்பைத் தவிர்த்திருக்கலாம் எனவும் விளக்கம் அளித்துள்ளார் நிர்மலா. கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 390 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 113 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications