கோவை பேரூர் தோப்புகளில் அலைமோதும் ஆண்கள் கூட்டம்.. டாஸ்மாக் குடிமகன்களுக்கு ஒரே ஆச்சரியம்
கோவை: கோவையை அடுத்த பேரூர் அருகே காளம்பாளையத்தில் இருந்து, நொய்யல் ஆற்றுக்கு செல்லும் வழியில் ஏராளமான பாக்கு, தென்னை, வாழை மரத் தோப்புகள் இருக்கிறது. இங்கு ஞாயிறுகளில் ஆண்கள்கூட்டம் அலைமோதுகிறது.வார நாட்களிலும் ஆண்கள் கூட்டம் அதிகமாக செல்வதாக கூறப்படுகிறது. என்ன காரணம் என்றால் கள் விற்பனை தான். கள்பிரியர்களுக்கு இந்த பகுதிகளில் தாராளமாக கள் கிடைப்பதால் படை எடுத்து வருகிறார்களாம். கள் விற்பனைக்கு தடை உள்ள நிலையில், தடையை மீறி விற்கப்படும் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது,
தமிழ்நாட்டில் கள் இறக்கவும், விற்பனை செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். அது போல் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழக அரசோ, கள் இறக்கவோ அதனை விற்கவோ அனுமதி இல்லை.. அதை மீறி 'கள்' இறக்கி விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பது வழக்கமாக உள்ளது.

அதிமுக ஆட்சியிலும் சரி, தற்போது திமுக ஆட்சியிலும் சரி, கள் இறக்க அனுமதி அளிக்க ஆட்சியாளர்கள் மறுத்து வருகிறார்கள். காரணம்.. கள் இறக்க அனுமதி அளித்தால் அதை முறைப்படுத்துவது கடினம் என்றும், போதை மாத்திரைகள் கலந்து விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது என்றும், அப்படி நடந்தால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் டாஸ்மாக் மதுபானம் போல் வரிவருவாய் விவகாரத்திலும் பிரச்சனை ஏற்படும் என்று கூறப்படுவதால் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
அதேநேரம் கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் கள்ளு கடைகள் செயல்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை கள் விற்பனைக்கு தடை என்றாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், உள்காட்டு கிராமப்பகுதிகளில் கள் விற்பனை செய்யப்படுவது அவ்வப்போது நடக்கிறது. அந்த வகையில் கோவையின் புறநகர் பகுதியில் கள்விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது.
கோவை பேரூர் அருகே காளம்பாளையத்தில் இருந்து, நொய்யல் ஆற்றுக்கு செல்லும் வழியில் உயர்மட்ட பாலம் இருக்கிறது. இதன் அருகே ஏராளமான பாக்கு, தென்னை, வாழை மரத் தோப்புகள் உள்ளன. இங்குள்ள தென்னந்தோப்புகளில் காலை மற்றும் மதிய நேரத்தில் 'கள்' இறக்கப்படுவதாகவும். அதை வாங்கி குடிக்க 'கள்' பிரியர்கள் தென்னந்தோப்புகளை நோக்கி படையெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பேரூர் பகுதியில் தோட்டங்களில் சாவகாசமாக அமர்ந்து 'கள்' குடிக்கவும் இடவசதி இருப்பதால். வார நாட்களிலும், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'கள்' வாங்க வருபவர்களின் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகிறது. கள் ஒரு லிட்டர் 120 என்கிற அளவில் விற்பனை செய்யப்படுவாக கூறும் குடிமகன்கள், டாஸ்மாக்கிற்கு பதில், இங்கு வருவதை விரும்புகிறார்களாம். தடையை மீறி நடைபெறும் கள் விற்பனைக்கு விரைவில் போலீசார் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications