கோவையில் ஆபத்தான முறையில் யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு அபராதம் விதித்த வனத்துறை
கோவை: கோவையில் அதிக ஒளியுடன் கூடிய முகப்பு விளக்கை எரியவிட்டபடியே யானையை ஆபத்தான முறையில் விரட்டிய அதிமுக பிரமுகர் மிதுனுக்கு ரூ 1 லட்சம் அபராதம் விதித்தது வனத்துறை.
கோவை நவமலை என்பது சிறிய கிராமம். இது கோட்டூர் - மலயாண்டிபட்டினம் இடையே உள்ளது. இங்கு ஆழியார் எனும் நீர் மின் நிலையம் ஆழியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியாகும். இங்கு 9 மலைகள் உள்ளதால் இதற்கு நவமலை என்ற பெயர் உண்டு. இங்கிருந்துதான் ஆழியாறு தனது பயணத்தை தொடங்குகிறது.
இந்த நவமலையில் இருந்து வரும் ஏராளமான நீரோடைகள் ஆழியாற்றை அடைகின்றன. இங்குள்ள காடுகள் பச்சை பசேல் என இருக்கும். இங்கு அரிய வகை மரங்களும் செடிகளும் உள்ளன. மலைகளில் கிரானைட் கற்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த அடர்ந்த காட்டில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
இங்கு பழங்குடியின மக்களும் வசித்து வருகிறார்கள். அடர்ந்த வன பகுதி என்பதால் இங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் சாலைகளில் இருக்கும். இதனால் இந்த வனப்பகுதிக்குள் செல்ல காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
அதற்கு மேல் எக்காரணத்தை கொண்டும் யாருக்கும் அனுமதி இல்லை. அனுமதி மீறி நுழைந்தால் வனத்துறை நடவடிக்கை எடுக்கும். இந்த நிலையில் கோட்டூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் மிதுன். இவர் இரவு நேரத்தில் அத்துமீறி கோவை நவமலை சாலைக்கு சென்றார். அப்போது ஒரு காட்டுயானை எதிரே வந்தது.
உடனே அவர் தனது காரில் அதிக ஒளியுடன் கூடிய முகப்பு விளக்கை எரிய விட்டபடியே அதை அடர்ந்த காட்டு பகுதிக்குள் விரட்டி அடித்தார். இதன் வீடியோவையும் சமூகவலைதளங்களில் வெளியிட்டார். இப்படி அத்துமீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் நுழைந்தது மட்டுமில்லாமல் ஆபத்தான முறையில் யானையை விரட்டியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வைரலான நிலையில் அதிமுக பிரமுகர் மிதுனுக்கு ரூ 1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications