கோவை கார் குண்டுவெடிப்பு நிகழ்வு! மேலும் ஒருவரை கைது செய்த தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள்!
கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த நிகழ்வு தமிழகம் தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கே நேரில் சென்று ஆய்வு செய்த அப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு கோவை மக்கள் பதற்றப்பட தேவையில்லை என நம்பிக்கையூட்டினார். அதுமட்டுமல்ல கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தமிழக அரசு பரிந்துரையும் செய்தது.

அதனடிப்படையில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஐமோஷா முபின் என்பவர் காரில் குண்டை வெடிக்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை தீவிரப்படுத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் இதுவரை 13 பேரை கைது செய்துள்ள நிலையில் 14வது நபராக இன்று கோவை போத்தனூரை சேர்ந்த தாகா நசீர் என்பவரை கைது செய்தனர். தாகா நசீரை பொறுத்தவரை கார் பெயிண்டராக வேலை பார்க்கிறார் என்பதும் ஐமோஷா முபினுடன் தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
என்.ஐ.ஏ. அதிகாரிகளால் தாகா நசீர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து ஓராண்டுக்கு பிறகு ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தாகா நசீரிடம் ஐமோஷா முபினை எப்படி தெரியும், என்ன பேசப்பட்டது என்பது குறித்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் என்.ஐ.ஏ. போலீஸ் நிலையம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது,
இதனிடையே கடந்தாண்டு நிகழ்ந்த இந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் பாஜக கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications