அதிகனமழையால் நிரம்பும் பில்லூர் அணை.. கோவை பவானி ஆற்றில் பெருகும் வெள்ளம்.. எச்சரிக்கும் கலெக்டர்
கோவை: கனமழையால் பில்லூர் அணை நிரம்பத்தொடங்கியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 6000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 38 செமீ மழை பதிவாகியுள்ளது. நடப்பாண்டில் அதிகபட்ச மழையாக அவலாஞ்சியில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவில் பெய்து வரும் அதி கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் வட்டம் பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடியில் தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் 94 அடியை எட்டி உள்ளது.
இதன் காரணமாக பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 6000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தினால் பவானி ஆற்று கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருந்திடவும், சிறுவர்கள் ஆற்று பக்கம் செல்ல வேண்டாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications