கோவை கல்லூரி மாணவர்கள் வட மாநில தொழிலாளர்கள் மோதல்..பெற்றோர்கள் அச்சம் வேண்டாம்..முதல்வர் விளக்கம்
கல்லூரியில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாகவும் பெற்றோர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் தனியார் கல்லூரி முதல்வர் விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை: வடமாநில தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் மோதல் எதுவுமில்லை எனவும் கல்லூரியில் இயல்பு நிலை நிலவுவதால் பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் தனியார் கல்லூரி முதல்வர் விஜயன் விளக்கம் அளித்துள்ளார். மொழி புரியாத காரணத்தால் மாணவர்கள் வட மாநில தொழிலாளர்களிடையே வாக்குவாதம் மட்டுமே ஏற்பட்டதாகவும் கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவையில் தனியார் கல்லூரி கேன்டீனுக்குள் நுழைந்து உருட்டுக்கட்டைகளுடன் வடமாநில தொழிலாளர்கள் தாக்கும் காட்சியும், மாணவ, மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் சூலூரில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி கேன்டீனில் தினமும் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உணவருந்தி வருகின்றனர். இந்த கேன்டீனில் 15க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிலையில், கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும்,கேன்டீனில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது வடமாநில தொழிலாளர்கள் உருட்டுக்கட்டைகளுடன் மாணவர்களைத் துரத்தி, துரத்தி தாக்கினர். இதனால் மாணவ, மாணவியர் கேன்டீனில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் சூலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே இந்த மோதல் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் தனியார் கல்லூரி முதல்வர் விஜயன் விளக்கம் அளித்துள்ளார். கேன்டீனில் சிக்கன் பரிமாறிய போது மாணவர்கள் சிலர் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களிடம் கேட்டதாகவும் மொழி புரியாத காரணத்தால் அது சண்டையாக மாறி விட்டது. இந்த சண்டையில் இரண்டு தொழிலாளர்களுக்கும், இரண்டு மாணவர்களுக்கும் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. தற்போது கல்லூரியில் இயல்பு நிலை நிலவுவதால் பெற்றோர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் கல்லூரி முதல்வர் விஜயன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications