மின்சார ஸ்கூட்டர் நிறுவனத்திற்கு பாடம் கற்பித்த கோவை இளைஞர்.. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கோவை: மின்சார ஸ்கூட்டர் டெலிவரி செய்ய தாமதம் ஏற்பட்டதற்காக மொத்த தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்று விற்பனை நிறுவனத்துக்கு, கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த இளைஞர், பெங்களூருவை சேர்ந்த ஒரு மின்சார ஸ்கூட்டர் விற்பனை நிறுவனத்தில் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு செய்திருந்த நிலையில், அவருக்கு சேவை குறைபாடு செய்து உள்ளதால், ஸ்கூட்டர் நிறுவனம் மொத்த பணத்தையும் வட்டியுடன் திரும்ப அளிக்க உத்தரவிட்டுள்ளது.
ஒரு பொருள் கடையில் வாங்குகிறீர்கள் என்றால், அதில் அவர்கள் குறிப்பிட்ட எடை சரியாக இருக்க வேண்டும்.. அதேபோல் ஒரு பொருளை இப்படி தருவோம். இத்தனை தரத்தில் தருவோம். இந்த நாட்களில் டெலிவரி தருவோம் என்று கூறினால், அதை சரியாக செய்ய வேண்டும். வேண்டுமென்றே தாமதம் செய்தாலே அல்லது அலட்சியமாக நிறுவனம் இருந்தாலே, தரம் குறிப்பிட்டபடி இல்லை என்றால், சேவை குறைபாட்டிற்காக அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர முடியும்.

பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அளவு குறைந்தால் வழக்கு போட முடியும். சிலிண்டரை பொறுத்தவரை சிலிண்டர் எடை அளவு சரியாக இல்லை என்றால் வழக்கு போட முடியும். அதேபோல் குளிர்பானம், மளிகை பொருட்கள் விற்பனை கடைகள், உணவு கடைகள், விமான நிறுவனம், பேருந்து நிறுவனங்கள், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் என எல்லாவற்றின் மீது சட்ட ரீதியாக சேவை குறைப்பாட்டிற்கு வழக்கு தொடர முடியும். அந்த வகையில் கோகையில் ஒருவர் வாகன தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்த பிரோஸ் ராஜன் என்ற இளைஞர், பெங்களூருவை சேர்ந்த ஒரு மின்சார ஸ்கூட்டர் விற்பனை நிறுவனத்தில் மின்சார ஸ்கூட்டர் வாங்க முடிவு செய்தார். இதன்படியே கடந்த 1-9-2023 அன்று ஆன்லைன் மூலம் தனக்கு பிடித்த மாடலில் மின்சார ஸ்கூட்டர் ஒன்றை முன்பதிவு செய்தார். மின்சார ஸ்கூட்டருக்கான தொகையாக ரூ.1 லட்சத்து 67 ஆயிரம், வாகன காப்பீட்டு தொகையாக ரூ.6,199-ஐ அனுப்பி உள்ளார்.
ஸ்கூட்டர் முன்பதிவு செய்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் ஸ்கூட்டரை டெலிவரி செய்யாமல் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்துள்ளார்கள். இதனால் முன்பதிவை ரத்து செய்து விட்டு பணத்தை திருப்பி தருமாறு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதற்கு அந்த நிறுவனம் போதிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது,
இதையடுத்து ஸ்கூட்டர் கிடைக்காததால் கவலை அடைந்த பிரோஸ் ராஜன் கோவை நுகர்வோர் கோர்ட்டில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை புகார் மனுவாக அளித்தார். இந்த மனுவை நுகர்கோர் கோர்ட்டு தலைவர் தங்கவேல், உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் விசாரித்து வந்தனர்.
பின்னர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில், பெங்களூருவை சேர்ந்த மின்சார ஸ்கூட்டர் விற்பனை நிறுவனம் சேவை குறைபாடு செய்து உள்ளது. எனவே மின்சார ஸ்கூட்டருக்கு பிரோஸ் ராஜனிடம் பெற்ற தொகை ரூ.1 லட்சத்து 67 ஆயிரம், காப்பீட்டுக்காக பெற்ற தொகையான ரூ.6,199-ஐ 9 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications