“கிணறு வெட்டாமலேயே ரசீது” போலி கணக்கு காட்டி ரூ.10 லட்சம் சுருட்டல் - லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி!
கோவை : கடந்த அ.தி.மு.க ஆட்சியில், கோவை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, முந்தைய ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் முறைகேடுகள் நடந்தது குறித்து விசாரிப்பதற்காக ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் முதல்வர் ஸ்டாலினால் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார், இதுதொடர்பாக மாநகராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று கோவை மாநகராட்சியில் ஆய்வு செய்துள்ளார்.

இதுதவிர, முந்தைய ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்த புகார்களின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதில், கோவை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் ஒருவர் என மூவர் சிக்கியுள்ளனர்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அதிகாரியாக இருப்பவர் ஐசக் ஆர்தர். செயற்பொறியாளராக இருப்பவர் சசிபிரியா. இவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் பணியாற்றியபோது 23வது வார்டில் இரண்டு பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பணிகளும் காளம்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோ என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மூவரும் கூடிப்பேசி, மொத்தப் பணத்தையும் சுருட்டத் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, டெண்டருக்கான பணியையே தொடங்காமல் போலியாக ரசீதுகளை தயாரித்துள்ளார் காண்ட்ராக்டர் இளங்கோ. பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஐசக் ஆர்தர் பதிவு செய்தார். திட்டம் முடிவடைந்ததை பார்த்ததாக செயற்பொறியாளர் சசிபிரியாவும் கையெழுத்திட்டுள்ளார்.
இப்படியாக மூன்று பேரும் சேர்ந்து வேலையே செய்யாமல், திட்டத்தெற்கென ஒதுக்கிய ரூ. 10 லட்சத்தை சுருட்டியுள்ளனர். விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவலை அறிந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications