வீடு வாங்குவோர் கவனம்.. கோவையில் 53 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1 கோடி நிலம் அதிரடியாக மீட்பு
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட போத்தனூர் கருணாநிதி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமாக 42 சென்ட் பொது ஒதுக்கீட்டு நிலம் இருந்தது. இந்த நிலத்தை சிலர் முறைகேடாக பிரிந்து கிரையம் செய்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்நிலையில் இந்த இடத்தை ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் வேலிபோட்டு ஆகக்ரிமிக்க முயன்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து 53 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலத்தை அதிகாரிகள் அதிரடியாக ஜேசிபி மூலம் இடித்து அகற்றி மீட்டனர்.
பொதுவாக வீடு வாங்குவோர், வீட்டு மனை வாங்குவோர், அந்த இடம் எந்த பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது என்பதை பார்ப்பது நல்லது. ஏனெனில் வீட்டுமனை போடும் போது, பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, கிரையம் செய்து தரவும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக பாதைக்காக விட்டிருப்பார்கள்..

பொது ஒதுக்கீட்டு நிலம்
அதேபோல் பூங்காவிற்காக விட்டிருப்பார்கள். ரேஷன் கடை, தண்ணீர் தொட்டி, பார்க்கிங் என பொதுபயன்பாட்டிற்காக விட்டிருப்பார்கள்.. அதை சில நேரங்களில் ஏமாற்றி விற்கவும் வாய்ப்பு உள்ளது. கோவையில் 53 வருடம் முன்பு இப்படி ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் இப்போது மீட்கப்பட்டுள்ளது.
கோவை போத்தனூர்
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட போத்தனூர் கருணாநிதி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமாக 42 சென்ட் பொது ஒதுக்கீட்டு நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை தான பத்திரம் மூலம் ஒப்படைப்பு செய்யவில்லை என கூறப்படுகிறது. மேலும் அந்த 42 சென்ட் நிலத்தை முறைகேடாக 3 பேருக்கு மனைகளாக பிரித்து கிரையம் செய்து கொடுத்து இருந்தார்களாம்.இதை பல வருடங்கள் கழித்து கண்டுபிடித்த மாநகராட்சி அதிகாரிகள், அந்த நிலத்தை மீட்க முடிவு செய்தனர். கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
ஆளும் கட்சி பிரமுகர்
இதை அறிந்ததும் ஆக்கிரமிப்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அங்கு 7 சென்ட் நிலத்தில் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. மீதமுள்ள காலி இடத்தில் கடந்த வாரம் ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவர் கம்பி வேலி போட முயன்றதாக கூறப்படுகிறது. அதனை பொதுமக்கள் அதிரடியாக புகுந்து தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
இடித்து அகற்றம்
இதையடுத்து சர்ச்சைகள் அதிகமான நிலையில், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அந்த நிலத்தை உடனடியாக மீட்க உத்தரவிட்டார். இதையடுத்து தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அதிகாரி மகேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கு முடிவு செய்தனர். அதன்படி நேற்று போத்தனூர் போலீசாரின் உதவியுடன் கோவை மாநகராட்சி அதிகாரிகள் 2 பொக்லைன் எந்திரம் மூலம் அங்கிருந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அதிரடியாக இடித்து அகற்றினர்.
ஒரு கோடி நிலம் மீட்பு
அப்போது ஆக்கிரமிப்பாளர் தரப்பில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. எனினும் போத்தனூர் போலீசாரின் உதவியுடன் கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். சுமார் 53 ஆண்டுகளுக்கு பிறகு அந்த நிலத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications