கோயம்புத்தூரில் கேமராவில் பதிவான உருவம்.. தூக்கி வாரிப் போட்டுருச்சு.. கோவை வனத்துறையினர் சொல்வதென்ன?
கோவை: கோவையின் சுற்றுவட்டார பகுதிகளில் 800 இடங்களில் கேமராக்களை பொருத்தும்படி வல்லுநர்கள் சொல்லியிருக்கிறார்கள்.. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் சொல்வதென்ன? கேமராவை பொருத்த சொல்ல காரணம் என்ன?
கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட மதுக்கரை, கோவை, மேட்டுப்பாளையம், போளுவாம்பட்டி, காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன் பாளையம் ஆகிய 7 வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

குறிப்பாக, யானை, காட்டுமாடு, மான், செந்நாய், சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகள் கணிசமாக உள்ளன. அதேசமயம் புலிகள் நடமாட்டமும் இங்கு இருந்து வருகிறது.. ஆனால், தேசிய அளவிலான புலிகள் கணக்கெடுப்புப் பணியின் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகங்களில் மட்டுமே புலிகள் எண்ணிக்கை இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது.
புலி நடமாட்டம்: இந்த 2 வனச்சரகங்கள் தவிர்த்து மற்ற இடங்களிலும் புலிகள் நடமாட்டம் உள்ளதால் செல்போன் செயலி, தானியங்கி கேமராக்கள் மூலம் அவற்றை கண்காணிக்கவும், எண்ணிக்கையை முழுமையாக அறிந்துகொள்ளவும் "டபிள்யு.டபிள்யு.எஃப்-இந்தியா" (World Wide Fund for Nature-India) அமைப்புடன் இணைந்து வனத்துறை நடவடிக்கையை கடந்த வருடம் எடுத்திருந்தது.
இந்த கருவிகளை கொண்டு கோவையை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்படும்... அதேபோல, யானைகள், புலி, சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியானால், அவைகளை பிடித்து பாதுகாப்பாக அடர் வனப்பகுதிக்குள் கொண்டுசென்று வனத்துறையினர் விட்டுவிட்டு வருவார்கள்.
கண்காணிப்பு: இந்நிலையில், கோவையை ஒட்டிய வனப்பகுதியில் புலிகள் நடமாடி கொண்டிருக்கிறதாம்.. போளுவாம்பட்டி, காரமடை, மதுக்கரை பகுதிகளில் புலிகள் நடமாட்டம் சில மாதங்களாகவே இருப்பதாக வனத்துறையினர் தெரிவிக்கிறார்கள்.. எனவே தொடர் கண்காணிப்பிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் சொல்லும்போது, "போளூவாம்பட்டி, காரமடை, மதுக்கரை பகுதிகளில் மட்டும் கிட்டத்தட்ட 400க்கும் அதிகமான இடங்களில் கேமராவை, உரிய முறையில் ஆய்வு செய்து, பின்னர் பொருத்தியிருக்கிறோம். அப்போது தான் ஒரு புலியின் நடமாட்டத்தை கண்டறிந்தோம்..
கேமராக்கள்: எனவே, 800 இடங்களில் கேமராக்களை பொருத்தும்படி வல்லுநர்கள் சொல்லியிருக்கிறார்கள்.. ஏற்கனவே 400 கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.. இப்போது இன்னும் 400 இடங்களிலும் கேமராக்களை நிறுவ இருக்கிறோம்.. ஒட்டுமொத்த 800 இடங்களிலும் கேமராக்களை பொருத்திய பிறகுதான், எத்தனை புலிகள் இந்த பகுதிகளில் இருக்கின்றன என்பதை துல்லியமாக அறியமுடியும்." என்கிறார்கள்.
கோவை வனப்பகுதியை ஒட்டிய ஊர்களில் புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது, சுற்றுவட்டாரங்களில் கலக்கத்தையும், பீதியையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பும், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாமரத்தில், வாகனம் மோதி புலிக்குட்டி ஒன்று இறந்து கிடந்தது..
தாய்ப்புலி: குட்டி மட்டும் இருந்ததால், தாய்ப்புலியை காணவில்லை.. எனவே 5 கேமரா பொறிகளை பொருத்தி, தாய்ப்புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. ஆனால், தாய்ப்புலியின் நடமாட்டம் இதுவரை பதிவாகவில்லை என்று செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூர் வனப் பிரிவில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்டிசிஏ) வழிகாட்டுதலின்படி கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளதாக வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.. அதுமட்டுமலல புலிகள் நடமாடினால் வனப்பகுதி ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம் என்றம் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒருவேளை புறநகர் பகுதிகளில் புலி சிக்கினாலும், அவைகளை பாதுகாப்பாக கொண்டுபோய் வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications