சட்டென மோதிய வனத்துறை ஜீப்.. அச்சச்சோ பாகுபலி யானைக்கு என்ன ஆச்சு
கோவை: கோவை மாவட்டத்தில் மலைப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் யானை நடமாட்டம் அதிகம் இருக்கும். மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாகுபலி என்ற காட்டு யானை மிகவும் பிரபலம். நேற்று வனக்கல்லூரிக்குள் நுழைந்த அந்த யானை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது வனத்துறை வாகனம் பாகுபலி யானை மீது மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருப்பதால் அங்கு யானை, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும். வனத்தை ஒட்டிய கிராமங்களில் வனவிலங்கு நடமாட்டம் இருப்பதன் காரணமாக மனித - வனவிலங்கு மோதல் அதிகம் நடைபெறும் பகுதியாக கோவை மாவட்டம் உள்ளது.

யானை நடமாட்டம்
முக்கியமாக காட்டு யானைகள் உணவு, தண்ணீரை தேடி கிராமங்களுக்கு வருவது சகஜமாகவிட்டது. அப்படி வரும் யானைகள் விளை நிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்துவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சில நேரம் மனிதர்களுக்கு காயம் ஏற்படுவது, உயிரிழப்பது போன்ற பிரச்சனைகளும் நிலவும். சில நேரம் மனிதர்களால் யானைகள் பாதிக்கப்படுவதும் அதிகளவு உள்ளது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட காலமாக பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை சுற்றி கொண்டிருக்கிறது. இரவு நேரங்களில் சாதாரணமாக கிராமங்களில் அந்த யானை சுற்றி திரிவது வழக்கம். பாகுபலி யானை மனிதர்களை தாக்கவில்லை என்றாலும் விவசாய நிலங்களை அதிகம் சேதப்படுத்துவதாக புகார் உள்ளது.
பாகுபலி யானை
நேற்று இரவு 11.30 மணியளவில் சிறுமுகை வனப்பகுதியில் இருந்து பாகுபலி யானை வெளியேறியுள்ளது. தொடர்ந்து 12 மணியளவில் கோத்தகிரி சாலையில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வளாகத்திற்குள் சென்றுள்ளது. தகவலறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் இரண்டு ரோந்து வாகனங்கள் மூலம் பாகுபலி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
பொதுவாக பாகுபலி யானை அமைதியான குணத்தை கொண்டது என்று கூறுவார்கள். ஆனால் நேற்று வனத்துறையினர் விரட்டும் போது பாகுபலி யானை வனத்துறை வாகனத்தை எதிர்த்து நின்றுள்ளது. தனது தந்தத்தால் வனத்துறை வாகனத்தை அசைத்து பார்க்க முயற்சித்தது. அப்போது வனத்துறையினர் ஜீப்பில் சைரன் சத்தம் எழுப்பிய படி பாகுபலி யானையை விரட்ட முயற்சி செய்தனர்.
வாகனம் மோதல்
பாகுபலி திரும்பி ஓட முயற்சித்தபோது, திடீரென எதிர்பாராத விதமாக யானையின் பின் காலில் வனத்துறை ஜீப் மோதியது. இதனால் பதற்றமடைந்த பாகுபலி காட்டு யானை வனக் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியே சென்றது. வனத்துறையினர் அதை பின் தொடர்ந்து காட்டுக்குள் விரட்டினர். பாகுபலி யானையின் காலில் வாகனம் மோதியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு வன விலங்கு ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது வரை யாரையும் தாக்காத பாகுபலி யானையை, கோபம் மூட்டும் செயலில் வனத்துறையினர் ஈடுபடாமல் யானையை அமைதியான முறையில் விரட்ட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அளித்துள்ள விளக்கத்தில், "பாகுபலி யானையை விரட்ட முயற்சித்தபோது, யானையின் முன் பக்கம் மரம் இருந்ததாலும் மற்றும் கட்டிடங்கள் இருந்ததாலும், யானையின் முன்பக்கம் இருந்த மரத்தில் மோதி திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. யானை பின்னாடி வருகையில் அதன் பின்பகுதியானது வாகனத்தில் உரசியது. இதில் பாகுபலி யானைக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை. யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்." என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications