கோவையில் நோய் எதிர்ப்பு சக்தி ஆய்வு செய்யும் நவீன இயந்திரம் அறிமுகம்
கோவை: கோவையில் நோய் எதிர்ப்பு சக்தியை ஆய்வு செய்யும் நவீன இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மக்களிடம் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களிடமிருந்து இரத்த மாதிரிகள் கடந்த 19ம் தேதி முதல் நான்கு நாட்கள் சேகரிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் 42 இடங்களில் இரத்த மாதிரிகள் பொதுமக்களிடம் இருந்து எடுக்கப்பட்டது.
அமெரிக்காவில் உச்சம்... ஒரே நாளில் 1,19,348, பிரான்ஸில் 86,852 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னையில் ரத்த பரிசோதனை
இந்த நிலையில் கடந்த காலங்களில் இரத்த மாதிரிகளை சென்னைக்கு அனுப்பி பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் தற்போது கோவை பந்தய சாலையில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் இரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.
கோவையில் நவீன இயந்திரம்
அதற்காக நவீன இயந்திரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரிகளை கோவையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்யத் தொடங்கி உள்ளோம்.
ரூ2 கோடி மதிப்பு
இதற்காக ரூ2 கோடி செலவில் நவீன இயந்திரம் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மும்பையில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு வந்தது. அங்கு இருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்டது. புதிய இயந்திரத்தில் பத்து நிமிடத்தில் ஒரு முறை 50 ரத்த மாதிரிகள் அளித்தால் அது தொடர்ந்து பரிசோதனை முடிவுகளை அளிக்கும்.
நாள்தோறும் 5,000 மாதிரிகள்
இந்த இயந்திரம் தினமும் 2,000 முதல் 5000 வரை ரத்த மாதிரிகளை பரிசோதிக்கும் திறன் கொண்டது. இதனால் உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படும். இதன் மூலம் கோவை மக்களிடம் கொரோனா எந்த அளவுக்கு பரவியுள்ளது என்பது உடனே தெரிந்து விடும். இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரி கூறினார்.