மண்ணில் பிரிந்த காதலனை விண்ணில் சந்திக்க முடிவு செய்த காதலி.. விபரீதமான பிறந்த நாள் சர்ப்ரைஸ்
கோவை: கோவையில் கண் முன்னே காதலன் துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்யப்பட்டதை பார்த்த காதலி விரக்தியிலும் வேதனையிலும் இருந்தார். இந்நிலையில் தூக்கிட்டு அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது21) என்ற இளைஞரும் செட்டிப்பாளையம் அருகே மயிலாடும்பாறையை சேர்ந்த தன்யா (18) என்ற பெண்ணும் கடந்த 3 வருடங்களாக ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்களாம்.

இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்த போதும், எதிர்க்காமல் 2 வீட்டு பெற்றோரும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள். பெற்றோர் சம்மதத்தின் பேரில் 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்தனர். கடந்த 5-ந் தேதி பிரசாந்தின் காதலியான தன்யாவுக்கு பிறந்த நாள் ஆகும்.
காதலியின் பிறந்த நாளை கொண்டாடவும், அவருக்கு வாழ்த்து சொல்லவும் பிரசாந்த், கடந்த 4-ந் தேதி நள்ளிரவு தனது நண்பர்களுடன் மதுபோதையில், தன்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். கேக்குடன் சென்று தன்யாவை வெளியே வரும்படி கூறி அழைத்திருக்கிறார்
நள்ளிரவில் வந்து சத்தம் போட்டதால் தன்யாவின் பெற்றோர், பிரசாந்த்தை கண்டித்துள்ளார்கள். அப்போது அங்கிருந்த தன்யாவின் தாய்மாமாவான விக்னேசுக்கும், பிரசாந்த்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த, விக்னேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரசாந்தை சரமாரியாக வெட்டி தள்ளினார். இதில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்துவிட்டார்.

இதுதொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்னேசை கைது செய்தார்கள். இதற்கிடையே தனது காதலன், தன் கண்முன்பாக வெட்டி கொல்லப்பட்டதால் தன்யா மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். யாரிடமும் பேசாமல், தனி அறைக்குள் முடங்கி கிடந்த அந்த பெண்ணுக்கு பெற்றோர் ஆறுதல் கூறி சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.
ஆனால் தன்யா சமாதானம் ஆகவில்லை. கடந்த 6-ந் தேதி இரவு வீட்டில் இருந்த தன்யா திடீரென விஷத்தை குடித்து மயங்கினார். இதனை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு கோவை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் குணம் அடைந்து தன்யா வீட்டிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டார்.
வீட்டிற்கு வந்த பின்னரும், அவர் தனது காதலன் கொல்லப்பட்டதை நினைத்து வேதனையில் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். மகள் தொடர்ந்து மனவேதனையில் இருந்ததால், மீண்டும் இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டு விடக்கூடாது என்பதால் அவரது பெற்றோர் அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மிகவும் கவனித்து வந்தார்கள்.
தன்யாவுக்கு உதவியாக அவரது பாட்டியை வைத்து விட்டே சென்றார்கள். நேற்று தன்யாவின் தாய், தந்தை இருவரும் வேலை விஷயமாக வெளியில் சென்றுவிட்டார்கள். மாணவி அப்போது பாட்டியிடம் தனக்கு வயிறு வலிப்பதாகவும், அதற்கு அருகே உள்ள மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி வா என்று தெரிவித்து, அவரை வெளியில் அனுப்பி வைத்தார். பாட்டியும் பேத்தி கூறியதை உண்மை என நம்பி மருந்து வாங்க கடைக்கு சென்றுவிட்டார். பாட்டி சென்ற பின்னர் தனது அறைக்குள் சென்ற தன்யா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தன்யாவின் பாட்டி, மருந்து கடைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் தன்யாவை காணவில்லை. இதனால் அவரது அறைக்கு சென்று பார்த்த போது அங்கு அவர் தூக்கில் பிணமாக தொங்கியை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். மேலும் தனது மகனுக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார். அவர்களும் விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் தற்கொலை செய்து கொள்வது எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு ஆகாது. தற்கொலை மன நிலை வந்தால் உடனே அரசின் 104 என்ற எண்ணிக்கு அழையுங்கள். அல்லது iCALL (Hours: Mon-Sat, 10 AM-8 PM. Languages: English, Hindi, Marathi, Gujarati, Bengali, Assamese, Kashmiri. Learn more) க்கு 9152987821 என்ற தொலைப்பேசி எண்ணில் அழையுங்கள். உங்களுக்கு மனஅழுத்தம், தாங்க முடியாத வேதனை, வாழ்வில் விரக்தி ஏற்பட்டால் தவறான முடிவு எடுக்காதீர்கள் சினேகா தற்கொலை தடுப்பு மையத்தின் 044-24640050 என்ற எண்ணிற்கு அழையுங்கள்.












Click it and Unblock the Notifications