கோவையை சூழும் மிக பெரிய பிரச்சினை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. என்ன தான் நடக்கிறது? ஷாக்
கோவை: குளுகுளு கோவை இப்போது பெரிய பிரச்சினையை எதிர்நோக்கி இருக்கிறது. பசுமையான கோவையில் கடந்த சில ஆண்டுகளில் அதிகளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் கோவை வெப்பம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், உடனடி நடவடிக்கை தேவை என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கோவை என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அதன் குளுகுளு கிளைமேட் தான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த குளுகுளு கிளைமேட்டும் அங்கு மாற தொடங்கியிருக்கிறது.

கோவை கிளைமேட்: கோவையின் ஜில் கிளைமேட்டிற்கு முக்கிய காரணமாக இருந்ததே அங்கிருந்த மரங்கள் தான். முன்பெல்லாம் முக்கிய சாலைகளிலும் கூட இரண்டு பக்கமும் மரங்கள் தான் அதிகம் இருக்கும். இதுவே குளிர்ச்சியான கிளைமேட்டை கொடுத்தது. ஆனால், இப்போது கோவை படுவேகமாக தனது மரங்களை இழந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கோவை சுமார் 7,000 மரங்களை இழந்துள்ளது.. அதேநேரம் மரங்களை மீண்டும் நட்டு வளர்க்கவும் பெரியளவில் நடவடிக்கைகள் இல்லை.
கோவையைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளை விரிவாக்கம் செய்யும் போது மரங்கள் அதிகம் அகற்றப்பட்டதே இதற்குக் காரணமாகும். சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, நீலம்பூர் - அவினாசி ரோடு, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட சாலைகளை விரிவுபடுத்தும் பணிக்காக, கடந்த 10 ஆண்டுகளில் 7,600 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரச்சினை: விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற சட்ட விதிகள் இருக்கிறது. இருப்பினும், அதை முறையாக அமல்படுத்தாமல் விட்டதே கோவை மரங்களை இழக்கக் காரணம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.. அப்படியே மரக்கன்றுகள் நடப்பட்டாலும் அதை முறையாகப் பராமரிப்பது குறித்து யாருக்கும் கவலை இல்லை. இதுவும் பிரச்சினைக்கு மற்றொரு காரணமாக இருக்கிறது.
உதாரணமாக, பொள்ளாச்சி - கோவை சாலையில் 2,239 மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், அங்கு 24,000 மரங்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி ஆணையம் மூலம் நடப்பட்டது. ஆனால், மரங்களை நட்டதுடன் விட்டுவிட்டார்கள். அதை யாரும் பராமரிக்கவில்லை. இதுவே கோவைக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
புலம்பும் கோவை மக்கள்: இது குறித்து கோவையை மக்கள் கூறுகையில், "கோவையில் எல்லா பகுதிகளுக்கும் நான் சென்றுள்ளேன். கடந்த சில ஆண்டுகளில் மரங்களின் எண்ணிக்கை எந்தளவுக்குக் குறைந்துள்ளது என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. மரங்களை நட்டாலும் அதைப் பராமரிக்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. இதுவே பிரச்சினைக்குக் காரணம். மரங்களை நட்டால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளை அதைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கும்படி கொள்கையை உருவாக்க வேண்டும்" என்கிறார்கள்.
தீர்வு தான் என்ன: இந்த விவகாரம் குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதாலேயே பருவமழை குறைவது மற்றும் வறட்சி ஆகியவை அடிக்கடி ஏற்படக் காரணமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை மழை பொழிவு சீராக இல்லை.. எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. கோவையில் நிலைமை கையை மீறிச் செல்வதற்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications