மாசத்தில் 20 நாட்கள் திருட்டு.. 10 நாட்கள் ஜாலி டூர்.. ரூ 5 கோடியில் வீடு.. கோவையில் 4 பேர் கைது
கோவை: கோவையில் மாதத்தில் 20 நாட்கள் திருடிவிட்டு மீதமுள்ள 10 நாட்கள் சுற்றுலா சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதுதொடர்பாக 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் மாநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உடனடியாக கொள்ளையர்களை பிடிக்குமாறு மாநகர போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு மாநகரின் பல்வேறு இடங்களில் நகைப்பறிப்பு திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி போலீஸார் சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டவுன் ஹாலில் 3 பெண்கள் ஓடி சென்று ஆட்டோவில் ஏறுவதை மஃப்டியில் இருந்த போலீஸார் பார்த்தனர். அந்த ஆட்டோவை பிடிக்க முயன்ற போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த பெண்களை பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த ஆட்டோவின் எண்ணை தேடி எடுத்தனர். இதையடுத்து ஆட்டோவின் விவரங்களை சேகரித்து அதை ஓட்டிய நபரிடம் போலீஸார் அந்த 3 பெண்கள் குறித்து விசாரித்தனர். மேலும் அவர்களை எங்கே இறக்கிவிட்டார் என்பதையும் கேட்டறிந்தனர்.
அந்த 3 பெண்களையும் அரசு மருத்துவமனையில் இறக்கிவிட்டதாகவும் அவர்கள் 100 ரூபாய் ஆட்டோ கட்டணத்திற்கு பதில் ரூ 200 கொடுத்ததாகவும் டிரைவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் அரசு மருத்துவமனை மற்றும் பஸ் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் அந்த பெண்கள் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து ஒரு பையை எடுத்துக் கொண்டு வெளியே வருவதும் எதிரே உள்ள பஸ் ஸ்டான்டிற்கு வந்து அங்கு ஒரு இளைஞரிடம் போனை வாங்கி பேசி அங்கு வந்த பேருந்தில் ஏறி சென்றதையும் போலீஸார் பார்த்தனர். இதையடுத்து அந்த பெண்களிடம் போன் கொடுத்த இளைஞரை தேடினர்.
இந்த நிலையில் அந்த கும்பல் கோவை மருதமலை கோயிலுக்கு வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மாறுவேடத்தில் அங்கு தயாராக இருந்து 3 பெண்களையும் ஒரு ஆணையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பரமக்குடியைச் சேர்ந்த ரவி, அவரது மனைவி பழனியம்மாள், உறவினர்கள் வனிதா, நதியா ஆகியோர் ஆவர்.
அந்த 3 பேரையும் ரவி வழிநடத்தி வந்தது தெரியவந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பேருந்து, கோயில், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பல் மாதத்தில் 20 நாட்கள் திருடுவார்களாம்.
மற்ற 10 நாட்களுக்கு டூர் சென்று உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்தது. சுற்றுலாவின் போது நட்சத்திர ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் காஷ்மீர், டெல்லி, மும்பை என பிரபல சுற்றுலா தளங்களுக்கு சென்றுள்ளனர். திருடுவதற்கு முன்பு சாமி தரிசனம் செய்ததையும் வழக்கமாக கொண்டிருந்தனர். திருடிய பணத்தில் பெங்களூரில் 5 கோடியில் வீடு, விலை உயர்ந்த கார் என சொகுசாக வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுடைய குழந்தைகளையும் மருத்துவம், பொறியியல் படித்து வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications