கோவையில் 70 கிராம் மெத்தம்பெட்டமைன் போதை பொருள் சப்ளை! 9 பேர் கொண்ட நெட்வொர்க் கைது
கோவை: கோவையில் கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்களுக்கு மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக கேரளாவை சேர்ந்த 5 பேர் உள்பட 9 பேரை கோவை போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடம் இருந்து 70 கிராம் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் தேவநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போதைப் பொருள்களை வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து கோவை உள்ளிட்ட நகரங்களில் மாணவர்கள், ஐடி ஊழியர்களுக்கு விற்பனை செய்வதாக தகவல்கள் வந்தன.

இதையடுத்து பிப்ரவரி 27ஆம் தேதி ரேஸ்கோர்ஸ் போலீஸார் சோதனை நடத்தியதில் மெத்தபெட்டமைன் விற்பனை செய்ததாக நீலகிரியை சேர்ந்த மிதுன்ராஜ் (27) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 7 கிராம் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணை
அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் உடுமலையை சேர்ந்த ஜெகன்நாதன்(30), கோவை காளப்பட்டியைச் சேர்ந்த கோகுல் (28) ஆகியோருடன் சேர்ந்து மிதுன்ராஜ் போதை பொருள் விற்பனை செய்ததாக சொன்னார்.
மேலும் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து பெங்களூரில் இருந்து மெத்தபெட்டமைனை வாங்கி கோவையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜெகன்நாதன், கோகுல் ஆகியோரிடம் விசாரணை நடத்தி அவர்களை கைது செய்தோம். அவர்களது வீட்டில் இருந்து 10 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்துவிட்டோம்.
பெங்களூர்
அவர்கள் அளித்த தகவலின்படி, பெங்களூரில் இருந்து மெத்தபெட்டமைன் சப்ளை செய்யும் கும்பலை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த கும்பல் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பதுங்கியிருந்து போதை பொருளை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
கேரளா இளைஞர்கள்
அங்கு கேரளாவை சேர்ந்த அஸ்வின்(25), ரியாஸ் (32), அமல் (24), அப்துல் சலீம் (46), அன்சாத் (23), நீலகிரியை சேர்ந்த அசாருதீன் (28) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 53 கிராம் மெத்தபெட்டமைன், ரப்பர் ஸ்டாம்ப், கார், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
டெல்லியில் விற்பனை
அவர்கள் பெங்களூரில் தங்கி, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து போதை பொருட்களை வாங்கி பலருக்கும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களையும் கைது செய்வோம் என தெரிவித்தார்.
கோவையில் இப்படியா
கோவை போன்ற மெட்ரோபாலிட்டன் நகரத்தில் இதுபோல் போதை பொருள் விற்கும் கும்பல் பிடிபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மட்டுமல்லாமல் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இது போல் மெத்தபெட்டமைன் எனும் போதை பொருள் விற்பனை ஜரூராக நடைபெறுகிறது. இதை கட்டுப்படுத்த போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
தமிழகம் எங்கே செல்கிறது
எத்தனை பேரை கைது செய்தாலும் ஒருவர் போனால் இன்னொருவர், இவர் போனால் மற்றொருவர் என அடுத்தடுத்து புற்றில் இருந்து ஈசல் கிளம்புவது போல் சமூகவிரோதிகள் கிளம்பி வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் போதை பொருளை விற்பதும் வாங்குவதும் இளைஞர்கள் என தெரியும் போது தமிழகம் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.












Click it and Unblock the Notifications