வீடியோ கால் மூலம் அத்துமீறிய ஆசிரியர்.. கொதித்தெழுத்த மாணவிகள் - கைது செய்யக்கோரி மறியல்
வீடியோ கால் மூலம் ஆபாசமாக பேசி அத்துமீறிய ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று கோவையில் பள்ளி மாணவ மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.
கோவை: ஆன்லைன் பாடம் நடத்தும் போது மாணவிகளிடம் ஆசிரியர்கள் ஆபாசமாக பேசுவதும் வீடியோ காலில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. கோவையில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய அரசுப்பள்ளி ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று கோரி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
தமிழகத்தில் பல பள்ளிகளில் ஆசிரியர்களின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட பல ஆசிரியர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் மாணவிகளிடம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியும், ஆடை அணியாமல் ஆன்லைனில் பாடம் நடத்தியும் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை கைது செய்யக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனினும் ஆசிரியரை கைது செய்யும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் அத்துமீறல்
கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணிபுரியும் கணிணி அறிவியல் ஆசிரியர் விஜய் ஆனந்த் என்பவர் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அத்துமீறிய ஆசிரியர்
குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் விஜய் ஆனந்த், ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்கு தனியாக வீடியோ கால் செய்து தொல்லை கொடுப்பதாகவும், கம்ப்யூட்டர் கிளாஸுக்கு போகும் போது தேவை இல்லாமல் தொட்டுத் தொட்டு பேசுவதாகவும் கூறப்படுகிறது. ஆன்லைன் வகுப்பு என்று கூறி மாணவிகளுக்கு தனியாக வீடியோ கால் செய்து, டி ஷர்ட் அணியுமாறும் கூறுவாராம்.

தனியாக இல்லையா?
வீட்டில் யாரும் இல்லையா எனக் கேட்டு ஆபாசமாக நடந்துகொள்ளுவதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வகுப்பின் போது வீடியோ காலில் மேல் சட்டை இல்லாமல் வருகிறார் என்று மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளியே சொன்னால் செய்முறை தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது.

நடவடிக்கை தேவை
பாதிக்கப்பட்ட மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் விஜய் ஆனந்த் பற்றி புகார் அளித்தனர். ஒரு வாரத்திற்கு முன்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தலைமை ஆசிரியர் இப்பிரச்னை தொடர்பாக புகார் அளித்தார். இதுவரை குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் மாணவ மாணவிகள் கொதித்து எழுந்தனர்.

ஆசிரியர் இடைநீக்கம்
ஆசிரியரை கைதுசெய்ய வலியுறுத்தி பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் விஜய் ஆனந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை மாணவர்களிடம் ஆசிரியர் கூறியும் அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர். அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தனர். காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்குச் சென்றனர்.

பிரச்சினை தீர வழி
இந்த பிரச்சினை தீர மாணவிகள் பயிலும் பள்ளிகளுக்கு கட்டாயமாக பெண் ஆசிாியா்கள் மட்டும் தான் இருக்க வேண்டும். மாணவா்கள் பயிலும் பள்ளிகளில் ஆண் ஆசிாியா்கள் மட்டுமே இருக்க வேண்டும். இதை தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் அனைத்திலும் கட்டயமாக அமல்படுத்த வேண்டும் எனவும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்குமா?












Click it and Unblock the Notifications