குலுங்கிய கோவை.. வீதிக்கு வந்து போராடிய ஊழியர்கள்.. ஓபிஎஸ் முதல் ஆளாக அறிக்கை.. மிஸ் செய்த இபிஎஸ்!
கோயம்புத்தூர்: ஜவுளி மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கோயம்புத்தூரில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் கோயம்புத்தூரில் நேற்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இது தொடர்பாக தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் பல்வேறு மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. ஜவுளி துறை தொடங்கி கைவினை பொருட்களின் மூலப்பொருட்கள் வரை பலவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. காப்பர், அலுமினியம், இரும்பு ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த சில மாதங்களில் மூலப்பொருட்களின் விலை 30 சதவிகிதம் முதல் 200 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இந்த நிலையில்தான் மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடு முழுக்க பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தின.

போராட்டம்
மூலப்பொருட்களின் விலையை உடனே குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து நாடு முழுக்க இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு கோவையிலும் பல்வேறு தொழிற்சங்கங்கள் தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தன. சிறு சிறு தொழிற்சங்கங்கள் சேர்ந்து கோவையின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக போராட்டம் நடத்தின. நேற்று கோவையில் தொழிற்சாலைகள் ஒருநாள் கதவடைப்பு போராட்டம் நடைபெற்றது.

முடக்கம்
கோவை ஆட்சியர் அலுவலகம் முன் 2500க்கும் அதிகமான தொழிலாளர்கள் கூடி விலைவாசி உயர்வை குறைக்கும்படி கோரிக்கை விடுத்து போராட்டம் செய்தனர். இதனால் 50 ஆயிரம் சிறு குறு நிறுவன பணிகள் நேற்று முடங்கின. அதேபோல் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்திகள் நேற்று முடங்கின, கோவை முழுக்க 5 லட்சம் பேர் வரை இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கோவை போராட்டம்
சி.ஆர்.ஐ., டெக்ஸ்மோ, பிரிகால், சிட்கோ உள்ளிட்ட கோவையின் அனைத்து விதமான தொழில்நிறுவன ஊழியர்கள் எல்லோரும் நேற்று இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். கோவையை இந்த போராட்டம் குலுக்கிய நிலையில் கோவையின் முக்கிய அரசியல் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இதை பற்றி பெரிதாக இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. மாறாக அறிக்கையும் வெளியிடவில்லை.

கடிதம்
மாறாக ஜவுளி மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களின் விலை உயர்வை உடனே குறைக்க வேண்டும். உடனே ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் ஜவுளித்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video

அறிக்கை
ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை மீண்டும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இதுதான் விலைவாசி உயர்வை குறைக்கும். ஊழியர்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். விலை உயர்வு ஊழியர்களை மட்டும் பாதிக்காது. சிறு - குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பெரிதும் பாதிக்கும் . குடும்பங்களையும் பாதிக்கும். கொரோனா பரவல் காரணமாக அவர்கள் இழப்பை சந்தித்துவிட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக ஜவுளித்துறை மிகுந்த இன்னல்களை சந்தித்துள்ளது என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications