அதிமுக அடுக்கடுக்கான புகார்.. கோவை தெற்கு தொகுதி சர்ச்சைகள் குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம்
கோவை: கோவை தேர்தல் களம் கொதித்து கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜி, வேலுமணி இடையே அதிகார போட்டி உச்சத்தில் உள்ளது. கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். கோவை தெற்கில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அதிமுக கூறியுள்ளது. அதிமுக குற்றச்சாட்டு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பவன்குமார் கிரியப்பனவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 120க்கும் மேற்பட்ட பறக்கும் படை குழு, 90 கண்காணிப்பு குழு களத்தில் உள்ளனர்.

கோவை தெற்கில் கூடுதல் கவனம்
சில தொகுதிகளில் கூடுதல் குழுக்கள் அமைத்து கண்காணித்து வருகிறோம். சட்டம், ஒழுங்கு பிரச்சனைக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேர்தல் விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். வருகிற புகார்கள் மீது உடனடியாக விசாரித்து கூடுதல் குழுக்கள் நியமித்துள்ளோம். கோவை தெற்கு தொகுதி உள்பட அனைத்து தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.
புகார்கள் மீது காவல்துறை ஆணையர், கண்காணிப்பாளர் மூலம் வழக்குப்பதிவது மற்றும் சிஎஸ்ஆர் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மீதும் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம். இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகள்படி, வெளியூர்களில் இருந்து கோவையில் தங்கியிருப்போர்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.
சட்டம் ஒழுங்கு
எத்தனை வழக்குகள் பதிவு செய்திருக்கிறோம், எவ்வளவு பணம், பொருட்கள் பறிமுதல் செய்திருக்கிறோம் என்பதை தினசரி பத்திரிகை செய்தியாக வெளியிட்டள்ளோம். எங்கிருந்து அழைப்புகள், புகார் வந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். கோவையில் சட்டம் ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தேர்தல் நடத்தி விரிவான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.
எந்த அசம்பாவிதம் இல்லாமல் கோவையில் தேர்தல் நடத்தப்படும். கோவை தெற்கு தொகுதியில் 20க்கும் மேற்பட்ட குழுக்கள் புகார்களை விசாரிக்க களத்தில் உள்ளனர். கோவையில் 182 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறிந்துள்ளோம்" என்றார். அதிமுகவினர் தேர்தல் ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டதற்கு அவர் பதிலளிக்கவில்லை.













Click it and Unblock the Notifications