கோவை மாணவி விவகாரம்.. வைரலாகும் கடிதம்.. மகளின் தற்கொலையுடன் தொடர்புடையதல்ல.. தந்தை விளக்கம்
கோவை: சமூகவலைதளங்களில் பரவும் கடிதம் என் மகளின் தற்கொலையுடன் தொடர்புடையதல்ல என கோவை மாணவியின் தந்தை விளக்கியுள்ளார்.
கோவையை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்த நிலையில் இந்த பள்ளியில் தனக்கு படிக்க விருப்பமில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து வேறு பள்ளியில் அவரை சேர்த்துவிடுமாறு பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் அந்த சிறுமியை ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் சேர்த்துள்ளனர்.

தூக்கிட்டு தற்கொலை
இந்த நிலையில் மாணவி கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்குக்குள்ளாகியிருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இறப்பு
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உக்கடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் போலீஸார் நடத்திய விசாரணையில் மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதிய ஒரு கடிதம் கிடைத்ததாகவும் அதில் சின்மயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி அங்கு படித்த போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இரு தோழிகள்
மிதுனின் பெயருடன் மேலும் இரு தோழிகளின் தாத்தா மற்றும் தந்தையின் பெயர்களையும் அந்த பெண் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில் அதில் மிதுன் சக்கரவர்த்தி அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை தந்தது தெரியவந்தது. அவர் மாணவியுடன் ஆபாசமாக பேசிய ஆடியோ ஆதாரங்களையும் போலீஸார் கைப்பற்றினர்.

மிதுன் சக்கரவர்த்தி கைது
இதையடுத்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை நேற்று மாலை கைது செய்தனர். இந்த நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்தும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காததாக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய வேண்டும் என பள்ளி மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

2 தனிப்படைகள்
இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திமுக எம்பி கனிமொழி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து அந்த பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி
இந்த நிலையில் கோவை மாணவியுடன் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மேற்கொண்ட வாட்ஸ் ஆப் உரையாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உரையாடல்கள் அந்த மாணவி அந்த பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாறுவதற்கு முன்பே நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் மாணவியின் தற்கொலை கடிதம் என ஒன்று வெளியாகி வரும் நிலையில் அது அவருடைய கடிதம் அல்ல என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

கடிதம்
இதுகுறித்து அந்த மாணவியின் தந்தை புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் தற்போது நடந்த சம்பவம் தொடர்பானது இல்லை என மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். இருந்தும் அந்த கடிதம் தொடர்பாக காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications