‛மோதலை தூண்டுகிறார்’.. நாம் தமிழர் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் மீது பாய்ந்த வழக்கு! என்னாச்சு?
கோவை: நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது மோதலை தூண்டுவதாக கூறி கோவை உக்கடம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் பேசிய பேச்சுக்கு தற்போது 4 மாதங்களுக்கு பிறகு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில செயலாளராக இருப்பவர் இடும்பாவனம் கார்த்திக். இவர் நாம் தமிழர் கட்சி சார்பில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். மேலும் அவ்வப்போது தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் தான் இடும்பாவனம் கார்த்திக் கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கோவை மாவட்டம் உக்கடத்தில் எஸ்டிபிஐ சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார். பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் இடும்பாவனம் கார்த்திக் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசினார். இந்நிலையில் தான் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது இருபிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக இடும்பாவனம் கார்த்திக்கின் பேச்சு இருந்ததாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து 2 பிரிவுகளில் இடும்பாவனம் கார்த்திக் மீது உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேச நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசி மோதலை தூண்டுவதாக கூறி 2 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இடும்பாவனம் கார்த்தி உக்கடத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்று பேசி 4 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் தான் தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இடும்பாவனம் கார்த்திக் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என கூறிவருகின்றனர்.
சமீபகாலமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி நாம் தமிழர் நிர்வாகிகள் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேளையில் கூட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் மக்கள் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது இடும்பாவனம் கார்த்திக் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications