உக்கடம் மேம்பாலம் பக்கம் போறீங்களா.. ரொம்பவே கவனம் தேவை.. கோவை மக்களே உடனே இதை நோட் பண்ணுங்க
கோவை: கோவை மக்கள் அதிகம் எதிர்பார்த்து இருந்த மேம்பாலங்களில் ஒன்றான உக்கடம் மேம்பாலம் கடந்த ஆக. மாதம் திறக்கப்பட்டது. மேம்பாலம் திறக்கப்பட்டு இத்தனை காலம் ஆகிவிட்ட போதிலும், இன்னுமே மேம்பாலத்தில் பல பணிகள் முடியவில்லையாம். இதனால் இரவு நேரங்களில் வாகனங்களை இயக்குவதே சிரமமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
சென்னைக்கு அடுத்து தமிழ்நாட்டில் முக்கிய நகரமாகக் கோவை உள்ளது. ஆனாலும், கோவையில் மின்சார ரயில், மெட்ரோ என பொது போக்குவரத்து பெரிதாக இல்லை. மக்கள் பேருந்துகளை மட்டுமே நம்பியுள்ளனர்.

கோவை மேம்பாலம்: இதனால் காலை, மாலை நேரங்களில் வெளியே சென்றால் நிச்சயம் டிராபிக்கில் சிக்கிக் கொள்வோம் என்ற சூழலே நிலவுகிறது.. உக்கடம் உள்ளிட்ட சில பகுதிகளில் டிராபிக் மோசமாக இருந்த நிலையில், உக்கடம் டூ ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ரூ. 481 கோடியில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் கடந்த ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் டிராபிக் வெகுவாக குறைந்துள்ளது.
இந்தளவுக்கு முக்கியமானதாக உள்ள உக்கடம் மேம்பாலம் திறக்கப்பட்டுப் பல வாரங்கள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் மேம்பாலத்தின் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என்று வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். இதனால் உக்கடம் மேம்பாலத்தில் செல்லும் போது, அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும் போது சிரமம் ஏற்படுவதாகவும் அவர்கள் புகார் கூறுகிறார்கள்.
புலம்பும் வாகன ஓட்டிகள்: இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், "உக்கடம் மற்றும் வாலாங்குளம் ரோடு சந்திப்பு இடையே சாலை மார்கிங் எதுவும் இல்லை.. மேலும் இரவு நேரத்தில் உதவும் ரிப்ளக்டர்கள் கூட இல்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவது சிரமமாகவே இருக்கிறது. மேலும், மேம்பாலத்தில் மழைநீர் வடிகால்கள் பணிகள் முடியவில்லை. பெயிண்டிங் பணிகள் கூட நிலுவையில் உள்ளன.
குறிப்பாக உக்கடம் பேருந்து நிலையம் மற்றும் சர்வீஸ் சாலையை இணைக்கும் சாய்வு தளம் இதுவரை முழுமையாக முடியவில்லை. இதனால் இரவில் வாகனம் ஓட்டுவதே சவலாக உள்ளது" என்று புலம்புகிறார்கள். மேலும், வின்சென்ட்-வாலாங்குளம் ரோடு சந்திப்பில், புதிதாகத் திறக்கப்பட்ட சாய்வு தளம் தொடங்கும் இடத்திலும் கூட சாலை மோசமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.
தற்காலிக ரவுண்டானா: அங்கு அதிகாரிகள் சந்திப்பில் தற்காலிக ரவுண்டானா அமைத்து நிலைமையைச் சமாளித்துள்ளனர். இருப்பினும், இந்த குறிப்பிட்ட பகுதியில் சாலை மோசமாக உள்ளதால் அதை விரைந்து சீர் செய்யப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற அதிருப்தி பொதுமக்களிடையே அதிகரிக்கும் நிலையில், இது குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாகக் கோவை நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மேம்பாலத்தின் முக்கிய பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. பெயின்டிங், சென்டர் மீடியன் அமைப்பது, சாய்வுதளப் பணிகள் என்று ஓரிரு சின்ன சின்ன வேலைகள் மட்டுமே இருக்கிறது. அதற்கும் கூட நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். வரும் நாட்களில் அந்த பணிகளையும் முடித்துவிடும்" என்று தெரிவித்தார்.
மோசமான சாலை: வின்சென்ட் - வாலாங்குளம் ரோடு சந்திப்பு குறித்துக் கேட்ட போது, அங்குச் சோதனை அடிப்படையிலேயே தற்காலிக ரவுண்டானா அமைத்து போக்குவரத்து இருப்பதாக அதிகாரி தெரிவித்தார். சோதனை ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே வடிவமைப்பு இறுதி செய்யப்படும் என்றும் அதன் பிறகே அங்கு மோசமான சாலைகளைச் சீர் செய்ய நடவடிக்கை எடுப்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications