கோவைக்கு கமாண்டோ படை வருகை.. தீவிர தேடுதல் வேட்டை.. காவல் ஆணையர் முக்கிய அறிவிப்பு
Recommended Video
கோவை: தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்த எச்சரிக்கையை அடுத்து தமிழக கமாண்டோ படையினர் கோவைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் 10 குழுக்களாக பிரிந்து மாநகர எல்லைகளை சுற்றி வளைத்து சோதனை நடத்த உள்ளனர். இதனிடையே மக்கள் அச்சப்பட தேவையில்லை கோவை காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறைக்கு உளவுத்துறை நேற்று எச்சரிக்கை விடுத்தது அதில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாக தகவல் வந்தது.
இதன் காரணமாக கோவையில் மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் பேருந்து நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கோவை காவல் ஆணையர் சுமித் சரண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 6 தீவிரவாதிகள் கோவையை நோக்கி நோக்கி வருவதாக தகவல் வந்துள்ளது. கோவை மாநகரம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள்.
மேலும் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் மக்கள் கவலைப்படவோ, பயப்படவோ தேவையில்லை. இது பொதுவான எச்சரிக்கைதான். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தகவல் எங்கிருந்து வந்தது என்பதை வெளியிடமுடியாது என கூறினார்.
இதனிடையே தமிழக கமாண்டோ படையினர் கோவைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் 10 குழுக்களாக பிரிந்து மாநகர எல்லைகளை சுற்றி வளைத்து சோதனை நடத்த உள்ளனர்.