கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மாநகராட்சி ஊழியர்கள் 2 பேர் உயிரிழப்பு.. கோவையில் சோகம்
கோவை: தூய்மை பணியாளர்களுக்கும், மாநகராட்சி கடைநிலை ஊழியர்களுக்கும் பணி பாதுகாப்பு என்பதே இல்லை. எவ்வளவோ தொழில்நுட்பம் வந்தாலும் மனிதக் கழிவுகளை அகற்றவும், கழிவு நீர் தொட்டி பிரச்சனைகளை அவர்கள் தான் நேரடியாக கையாள்கிறார்கள். கோவை சாய்பாபா காலனி பகுதியில் 40 அடி ஆழம் கொண்ட மாநகராட்சி கழிவு நீர் தொட்டியின் மோட்டார் பழுதாகியுள்ளது. அதை சரி செய்ய சென்ற மாநகராட்சியின் 2 தற்காலிக ஊழியர்கள் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன்குமார் (38), பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர்கள் இருவரும் கோவை மாநகராட்சியில் தற்காலிக ஊழியர்களாக பணிபுரித்து வந்தார்கள். அர்ஜுன் ஃபிட்டராகவும் , சுரேஷ் எலக்ட்ரீசியனாகவும் தற்காலிக அடப்படையில் பணியாற்றினார்கள். சாய்பாபா காலனி, பாரதி பார்க் ஒன்றாவது வீதியில் கழிவுநீர் உந்து தொட்டியின் ஹெச்.பி மோட்டார் பழுதாகியுள்ளது.

மயக்கமடைந்த ஊழியர்
அர்ஜுன் மற்றும் சுரேஷ் நேற்று மாலை 4.30 மணியளவில் அங்கு சென்று மோட்டார் பழுதை நீக்கி அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அர்ஜுன்குமார் தொட்டிக்குள் இறங்கி, மோட்டாரை பொருத்திவிட்டு மேலே ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது தொட்டியில் உள்ள பைப், அர்ஜுன்குமார் தலையில் பட்டதால் அவர் நிலைக்குலைந்து தொட்டியின் உள்ளே விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த சுரேஷ்குமார் கீழே இறங்கி அவரை காப்பாற்ற முயற்சித்தார்.
அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு அவரும் தொட்டியில் விழுந்தார். அந்த கழிவு நீர் தொட்டி 15 அடி விட்டமும், 40 அடி ஆழமும் கொண்டது. தற்போது சுமார்15 அடிக்கு கழிவு நீரில் தேங்கியது. இதனால் 2 பேரும் தப்பிக்க முடியவில்லை. தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் கழிவுநீரை வெளியேற்றி இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோவையில் சோகம்
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு மீட்டுப் பணிகளை துரிதப்படுத்திள்ளனர். சுமார் 7 மணி நேரம் போராடி, நள்ளிரவு 2 மணியளவில் தான் அவர்கள் இருவரின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து சாய்பாபா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications