தேர்தல் விதி மீறல்! போட்டோ கேட்ட அண்ணாமலை! புகார் மனுவை நீட்டிய CPI.. அதிரும் கோவை! அரசியல் சலசலப்பு
கோயம்புத்தூர்: தமிழகத்தில் அடுத்த வாரம் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. எனவே அரசியல் கட்சிகளின் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை, இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறது.
நாடு முழுவதும் 22 மாநிலங்களில் ஏப்.19ம் தேதி முதல் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்த அளவில் 39 தொகுதிகளுக்கும் அன்று ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே தேர்தல் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. பரப்புரைகளை போலவே, அரசியல் கட்சி தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. குறிப்பாக கோவை தொகுதி மாநிலம் முழுவதும் பெரும் கவனம் பெற்றிருக்கிறது.

கோவையில் திமுக vs அதிமுக vs நாதக vs பாஜக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. பாஜக சார்பில் அண்ணாமலை களமிறங்கி இருப்பதால், தொகுதியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மறுபுறம் தேர்தல் விதிமீறல் அதிகம் நடப்பதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக நேற்று முன்தினம் அண்ணாமலை, தேர்தல் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கியை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததாக புகார் எழுந்திருக்கிறது.
இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த புகாரில்,
"கோவை நாடாளுமன்ற தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தேர்தல் நடத்தை விதிகளை முற்றிலும் நிராகரித்து வருகிறார். கடந்த 12.04.2024 ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் ஆவாரம்பாளையம் பகுதியில் ஒலிபெருக்கியில் வாக்கு சேகரித்துள்ளார். பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர்கள் மௌன சாட்சியாக கடந்து சென்றுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் தொடர்ந்து மீறி செயல்பட்டு வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலையின் அத்துமீறல் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கேட்டுக் கொள்கிறது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அண்ணாமலை மறுத்திருக்கிறார். நேற்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர், "இரவு 10 மணிக்கு மேல் மக்களை சந்திக்க வேட்பாளர்களுக்கு உரிமை உள்ளது. 10 மணிக்கு மேல் மைக்கில் தான் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணைய விதி கூறுகிறது. நான் மைக்கை வைத்து பிரசாரம் செய்யும் வீடியோ இருந்தால் காட்டுங்கள்" என்று பத்திரிகையாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கோவையில் அரசியல் சலசலப்பு உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது.












Click it and Unblock the Notifications