பாஜகவின் ரெண்டு பெண்கள் கமல்ஹாசனை கதறவிட்டாங்க.. சீண்டிய பொன்.ராதாகிருஷ்ணன்.. என்ன சம்பவம்?
கோவை : கமல்ஹாசனை வானதி சீனிவாசன் தேர்தலில் தோற்கடித்தார் என்றால், ஸ்மிருதி இராணி தொலைக்காட்சி விவாதத்தில் கதறவிட்டார் என பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனை பாஜகவின் வானதி சீனிவாசன் தோற்கடித்தார். இந்நிலையில், இன்று வானதி சீனிவாசன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் பற்றியும் பேசியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மநீம தலைவர் கமல்ஹாசனை விமர்சித்துப் பேசியதைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில், பாஜகவின் பொன்னார் கமல்ஹாசனை சீண்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானதி சீனிவாசன் புத்தக வெளியீடு
பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் எழுதிய 'தடையொன்றுமில்லை' எனும் புத்தக வெளியீட்டு விழா இன்று கோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமை தாங்கி புத்தகத்தை வெளியிட்டார். பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மூத்த நிர்வாகிகள் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பெண்கள் அரசியலில் சாதிக்க
பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் பேசுகையில், "அரசியலில் சாதிக்க என் பெற்றோரும், கணவரும் , மகன்களும் முக்கிய காரணம். என்னை நல்வழிப்படுத்திய முக்கிய தலைவர்கள் மேடையில் அமர்ந்துள்ளார்கள். இது சுயசரிதை கிடையாது. என்னுடைய அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளேன். வீட்டில் உள்ள பெண்களும் அரசியலில் சாதிக்க முடியும் என்றால் நாம் அதற்கான நேரத்தை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.

மோடியே உதாரணம்
பாஜக பல்வேறு வாய்ப்புகளையும், பொறுப்புகளையும் எனக்கு கொடுத்துள்ளது. கொடுத்தும் வருகிறது. பதவி, பொறுப்பு என்பதை தலைக்கு ஏற்றாமல் மக்களுக்கு பணி செய்ய வேண்டும். பிரதமர் மோடிதான் இதற்கு உதாரணம். பல பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைய ஊக்குவிப்பதற்காக இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன்" எனப் பேசினார்.

வானதியின் பிடிவாத குணம்
இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "புத்தகத்தின் தலைப்பு 'தடையொன்றுமில்லை'. ஆனால் நான் அறிந்த வரை முழுக்க முழுக்க தடைகளை கடந்து வந்தவர் வானதி சீனிவாசன். தடை ஓட்டத்தில் ஓடுபவர் போல் எத்தனையோ சவால்களை அவர் சந்தித்துள்ளார். வானதியின் பிடிவாத குணமே அவரை தாழ்த்தாமல் உயர்த்தும். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியும் பிடிவாதக்காரர் தான்.

கமல் - வானதி - ஸ்மிருதி இரானி
ஒரு தேர்தலில் தான் தோல்வியுற்றாலும் பின்னர் அதே தொகுதியில் வெற்றி பெற்றவர். ஆண்களை விட தான் உயர்ந்தவர் என்ற குணம் படைத்தவர். ஆண்களுக்கு பாதுகாப்பாக துணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர். கமல்ஹாசனை வானதி சீனிவாசன் தேர்தலில் தோற்கடித்தார் என்றால், ஸ்மிருதி இராணி தொலைக்காட்சி விவாதத்தில் கதறவிட்டார்" என்று பேசினார்.

கமல் vs ஸ்மிருதி இரானி
கடந்த 2018ஆம் ஆண்டு ரிபப்ளிக் டிவியில் அர்னாப் கோஸ்வாமி நெறியாளராக செயல்பட்ட விவாத நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் பங்கேற்றனர். இந்த விவாதத்தில் கமல் பேச்சுக்கு அதிரடியாக பதிலடிகளைக் கொடுத்தார் ஸ்மிருதி இரானி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அப்போது தீயாகப் பரவியது. கேள்வி கேட்பவர்களையே சுற்றி விடும் வல்லமை கொண்ட கமல்ஹாசனை ஸ்மிருதி இரானி திணறடித்தது பேசுபொருளானது. இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டே பொன்.ராதாகிருஷ்ணன் கமலை இரண்டு பெண்கள் தோற்கடித்ததாக இன்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications