திமுக மாவட்டச் செயலாளர் மகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட்! சூடுபிடிக்கும் கோவை அரசியல் களம்!
கோவை: கோவை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மருதமலை சேனாதிபதி மகளுக்கு மாநகராட்சி தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.
22 -வயதே ஆன நிவேதா சேனாதிபதி தற்போது பஞ்சாப்பில் உள்ள பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலை உளவியல் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், நிவேதா சேனாதிபதி வார்டு கவுன்சிலராக வெற்றிபெறும் பட்சத்தில் மேயராகும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கோவை மாநகராட்சி
தமிழகத்தில் சென்னை மாநகராட்சிக்கு அடுத்தபடியாக 100 வார்டுகளை கொண்டுள்ள பெரிய மாநகராட்சியாக திகழ்வது கோவை மட்டுமே. அதேபோல் கோவை மாநகராட்சியில் எந்தக் கட்சியின் கொடி பறக்கப் போகிறது என்பதும் தமிழக தழுவிய அளவில் கவனம் ஈர்த்துள்ள ஒன்றாகும். காரணம் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இடையே நடந்து வரும் அரசியல் ஆடுபுலி ஆட்டம் கோவையை கடந்து பேசுப்பொருளாக அமைந்திருக்கிறது.

22 வயது இளம்பெண்
இந்நிலையில் கோவை மாநகராட்சியில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வரிசையாக வெளியாகி கொண்டே இருக்கிறது. நேற்றிரவு வெளியிடப்பட்ட 8-ம் கட்ட திமுக வேட்பாளர்கள் பட்டியலில் கோவை மாநகராட்சி 97-வது வார்டுக்கு கோவை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மருதமலை சேனாதிபதி மகளும், 22 வயது இளம் பட்டதாரி பெண்ணுமான நிவேதா சேனாதிபதியின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இது கோவை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

கோவை மேயர்
காரணம் கோவை மாநகாரட்சி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், திமுக அதிக இடங்களை கைப்பற்றும் பட்சத்தில் நிவேதா சேனாதிபதி கோவை மேயராக வருவதற்கு கூட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. தேர்தல் களம் புதிது என்றாலும் கூட தேர்ந்த அரசியல்வாதியை போல் வாக்குறுதிகளை கூறி வாக்குசேகரிப்பை தொடங்கிவிட்டார் நிவேதா சேனாதிபதி.

உளவியல் படிப்பு
கோவையில் இளங்களை பட்டப்படிப்பை முடித்த நிவேதா சேனாதிபதி, தற்போது பஞ்சாப்பில் உள்ள பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலை உளவியல் படித்து வருகிறார். திமுகவில் தமிழகம் தழுவிய அளவில் புதிய தலைமுறைகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக பிரதிநிதித்துவம் கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications