உடனுக்குடன் பறக்கும் சீக்ரெட் ரிப்போர்ட்! திமுகவினர் ஆளுநரை மாற்ற சொல்ல காரணமே வேற! வானதி சீனிவாசன்
கோவை: தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுகவினர் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ள நிலையில், இது தொடர்பாக வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆளுநர் அரசியல் பேசுவதாக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் புகார் அளிக்கின்றனர்.
மேலும், ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவரிடமும் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

வானதி சீனிவாசன்
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக திமுக அரசை விமர்சித்து பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தவறுகளைக் கண்டுபிடித்து விடுகிறார் என்பதால் தான் ஆளுநரை நீக்க திமுக கோருவதாகக் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

திமுக மீது அட்டாக்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என, தி.மு.க. கூட்டணிக் கட்சிகள், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதில் "மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கொள்கை அளவிலும், செயல்பாட்டு அளவிலும் எதிர்ப்பது மக்களாட்சிக்குச் சாவு மணி அடிக்கும் செயல்" எனக் கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது
திமுகவுக்கு ஆளும் கட்சியாக இருக்கும்போது தான், ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் என்பதெல்லாம் நினைவுக்கு வரும். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, சென்னாரெட்டி, சுர்ஜித்சிங் பர்னாலா ஆகியோர் மூலம், அன்றைய அதிமுக அரசுக்குக் கொடுத்த நெருக்கடிகளை மக்கள் மறந்திருப்பார்கள் என திமுகவினர் நினைக்க வேண்டாம். ஆளுநர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாதவராக இருக்கலாம். ஆனால், அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டவர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
எனவே, ஆளுநரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதிதான். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கென வகுக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படியே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். "சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் நோக்கிலான, மத ரீதியான கருத்துகளைப் பொதுவெளியில் ஆளுநர் பேசி வருகிறார். மக்கள் மனங்களில் வெறுப்பைத் தூண்டி, சமூக பதற்றத்தை உண்டுபண்ணும் நோக்கத்துடன் திட்டமிட்டு அவரது பேச்சுகள் அமைந்துள்ளன. திருக்குறளுக்கு மதச்சாயம் பூசுவது, திராவிட மரபையும், தமிழ்ப் பெருமையையும் விமர்சித்து வருகிறார்" என்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பு
கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காகத் தமிழகம் வந்த ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருக்குறளில் உள்ள குறைகளை, விமர்சன கண்ணோட்டத்தோடு விமர்சிப்பது எப்படி மதச்சாயம் பூசுவதாகும் என்பது தெரியவில்லை. திருக்குறளில் இந்து மதம் வலியுறுத்தும் அறம், பொருள், இன்பம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்து கடவுள்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ பாதிரியார் ஜி.யு.போப், அதிலுள்ள 'ஆன்மிகம்' என்ற 'ஆன்மா'வை தவிர்த்து விட்டார் என ஆளுநர் கூறியிருக்கிறார். இந்த விமர்சனத்திற்காகக் கொந்தளிக்கும் திமுகவினர், திருக்குறள் பற்றி, பெரியார் ஈ.வெ.ரா. கூறியதை ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துச் சொல்லும் உரிமை
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனது கருத்துகளைச் சுதந்திரமாகத் தெரிவிக்கும் உரிமை உள்ளது. அதன்படியே அவர், பொது நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். அதில், திமுகவுக்கு உடன்பாடு இல்லையெனில், 'கருத்துக்கு கருத்து' என்று, ஜனநாயக ரீதியில் பதில் அளிக்கலாம். அதைவிடுத்து அவரை பதவியிலிருந்து நீக்குமாறு கோருவதன் மூலம், திமுகவுக்கு ஜனநாயக வழியிலான கருத்து பரிமாற்றத்தில் நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.

தவறுகளைக் கண்டுபிடிக்கிறார்
திமுக அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காகச் சட்டத்தை மீறும்போது, சட்டம் - ஒழுங்கை பாதிக்கும் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டதைக்கூட, வாக்கு வங்கி அரசியலுக்காக மறைக்க முயலும்போதும் மாநில அரசைத் தட்டிக்கேட்கும் கடமை பொறுப்பில் ஆளுநர் இருக்கிறார். கடமையைச் செய்தவரை எதற்காகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்? திமுக அரசுக்குத் தனது விருப்பம் போலச் செயல்பட முடியவில்லை. எல்லா உண்மைகளையும், தவறுகளையும் ஆளுநர் கண்டுபிடித்து விடுகிறார்.

மத்திய அரசுக்குத் தகவல்
அதனை மத்திய உள்துறை அமைச்சர், பிரதமருக்கு உடனுக்குடன் சொல்லி விடுகிறார் என வருத்தம் இருக்கலாம். அதனால், திமுகவினருக்கு இழப்பும் ஏற்பட்டிருக்கலாம். தமிழகத்தின் நலன், தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே ஆளுநர் செயல்பட்டு வருகிறார். எனவே, ஆளுநர் மீது வெறுப்பைக் கக்காமல், மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல் தமிழகத்தின் நலனுக்காக அவருடன் திமுக அரசு இணைந்து செயல்பட வேண்டும். இது எனது கோரிக்கை மட்டுமல்ல, தமிழக மக்களின் விருப்பமும் இதுதான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications