அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட வழக்கு: திமுக எம்.எல்.ஏ. கார்த்திக்குக்கு முன்ஜாமீன்
கோயம்புத்தூர்: அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. கார்த்திக்குக்கு கோயம்புத்தூர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது
தி.மு.க.-வின் கோவை கிழக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், சிங்காநல்லூர் எம்.எல்.ஏ.வுமான கார்த்திக், கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். கோவை மாநகராட்சியின் ஒப்பந்த பணிகள் விவரங்கள், மாநகராட்சி தனி அலுவலரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநகராட்சி இணையதளத்தில் ஏன் வெளியிடப்படுவதில்லை என அந்த அறிக்கையில் கார்த்திக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கோவை குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வரும் ஆலயம் பவுண்டேஷன் என்ற அமைப்பின் இயக்குனர் புகார் ஒன்றை அளித்துள்ளார். சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது சகோதரரின் உதவியுடன் தங்களது நிறுவனம் கோவை மாநகராட்சியின் சார்பில் வழங்கப்படும் டெண்டர் வாங்கியதாக உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் நிறுவனத்தையும், அமைச்சரையும் இணைத்து பொய்யான தகவல்களை எம்.எல்.ஏ. கார்த்திக் பரப்பி வருவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில், எம்.எல்.ஏ. கார்த்திக் மீது, மூன்று பிரிவுகளில் குனியமுத்தூர் காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்
இதுதொடர்பாக கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. கார்த்தி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி சக்திவேல் பிறப்பித்துள்ள உத்தரவில் தினமும் விசாரணை அதிகாரி முன்பு கார்த்திக் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்












Click it and Unblock the Notifications