செந்தில் பாலாஜிக்கு வீட்டில் நடந்த கொடுமை.. கண்டன கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட டிஆர் பாலு
கோவை: செந்தில் பாலாஜி கடுமையான துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார் என்பதற்கு ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டி வேதனை வெளிப்படுத்தினார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் நேற்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அந்த வகையில் கோவையில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸிட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேசுகையில் இது ஒரு குடும்ப பிரச்சினையில் கழகத் தோழர்கள் மட்டுமே மிகப் பெரிய கூட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். கொங்கு மண்டலம் தனக்கு இழைக்கப்பட்ட தங்களுடைய இனத்தின் தலைவனுக்கு இழைக்கப்பட்ட கொடுமை என தானாக வந்த இந்த கூட்டம் வந்து சேர்ந்திருக்கிறது.
அப்படிப்பட்ட எழுச்சி மிக்க இந்த கூட்டம் பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். செந்தில் பாலாஜி மிகச் சிறந்த அமைச்சராக பணியாற்றி வரும் மாமனிதர். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி ஒன்றல்ல, இரண்டல்ல, 12 மணி வரை சோதனை செய்துவிட்டு வீட்டில் ஒன்றுமே இல்லாத நிலையிலும் சம்மன் ஏதும் கொடுக்காமலேயே சம்மன் வாங்கியது போல் கையெழுத்து கேட்டுள்ளார்கள்.
அமைச்சர் என்று கூட பாராமல் அவர் கொடுமையாக நடத்தப்பட்டுள்ளார், கொடுமையாக தாக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.நெஞ்சுவலியால் விழுந்த அவரை போய் நடிக்கிறார்கள் என அதிகாரிகள் நினைத்துக் கொண்டுள்ளார்கள். செந்தில் பாலாஜி சிறுநீர் கழித்துள்ளார். அவர் சுயநினைவை இழந்த போதுதான் இந்த சிறுநீர் கழிப்பது ஏற்பட்டிருக்கும்.
இப்படி செந்தில் பாலாஜியை கடும் மன உளைச்சலுக்குள்ளாக்கிய அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்திருக்க வேண்டும். இந்த அளவுக்கு மோசமான நிலையிலேயே நம்முடைய கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர் நடத்தப்படுகிறார் என்றால் கொங்கு மண்டலம் கிளர்ந்தெழுவதற்கு இந்த நிகழ்வே சாட்சியாக உள்ளது.
இநத் நிலையை பாஜக அரசு உணர வேண்டும். இன்னும் 6 மாதத்தில் கூட தேர்தல் வரலாம். அல்லது ஓராண்டு வரவுள்ள ஆட்சிக்கு அதிகாரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். கொங்கு மண்டலத்தில் மிக மிக முக்கியமான தலைவராக உள்ளார் என்றால் அது செந்தில் பாலாஜிதான். நாளையே நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் கூட 11 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்லக் கூடிய தகுதியும் திறமையும் செயல்திறனும் செந்தில் பாலாஜிக்கு உள்ளது.
இவரை சிறையில் அடைத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் வென்றுவிடலாம் என பாஜகவினர் பகல் கனவு காண்கிறார்களே இது நியாயமா, பாலாஜியின் செயல்திறனால் எதிரிகள் வீழ்த்தப்படுவார்கள். கொங்கு நாட்டு தங்கம், தீரன் சின்னமலையின் வாரிசாக செந்தில் பாலாஜி விளங்கி கொண்டு இருக்கிறார். கொங்கு மண்டலம் கோபாலபுரத்தை நோக்கித்தான் போய் கொண்டு இருக்கிறது என்பதை இங்கு வந்துள்ள கூட்டம் உணர்த்துகிறது.












Click it and Unblock the Notifications