செந்தில் பாலாஜி "வாய்ஸ்".. உளவுத்துறை ரிப்போர்ட்.. கோவையில் திமுக நேரடியாக போட்டி.. யார் வேட்பாளர்?
கோவை; நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது கூட்டணி கட்சியான சிபிஎம் இருக்கும் கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.

திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)
கடந்த வாரம் காங்கிரஸ் உடன் திமுக உடன்படிக்கையை மேற்கொண்டது. லோக்சபா தேர்தல்: காங். போட்டியிடும் 10 தொகுதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, சிவகங்கை, கரூர், புதுவை, கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறையில் காங்கிரஸ் போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதற்கு முன் மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இப்போதுதான் கையெழுத்து ஆனது.
அதேபோல் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை மற்றும் திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் கட்சி போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போட்டியிடுகிறது.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பாக மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதி எம்பியாக அந்த கட்சியின் ஏகேபி சின்ராஜ் உள்ளார்.
தேர்தல் வேலை: இப்படி கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் திமுகவை ஜெயிக்க வைப்பதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறாராம்.
அதன்படி தன்னை சந்தித்த சிலர் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான தகவல் ஒன்றை அனுப்பி உள்ளாராம் செந்தில் பாலாஜி. அதில்.. கோவை மற்றும் கரூரில் நாம்தான் ஜெயிக்க வேண்டும். கோவை மற்றும் கரூரில் இந்த முறை திமுகவே நிற்கட்டும். இப்போது கூட்டணி கட்சியிடம் உள்ள இடம் திமுகவிற்கு வந்தால் நாம் ஜெயிக்கலாம்.
தேர்தல் பணிகளை எனக்கு நெருக்கமானவர்கள் பார்த்துக்கொள்வார்கள். திமுகவில் சரியாக இருக்கும் சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டு செந்தில் பாலாஜி தலைமைக்கு தகவல் அனுப்பி உள்ளாராம். கொங்கு அரசியலை கரைத்து குடித்தவர் என்பதால் செந்தில் பாலாஜியின் ஆலோசனைகளை திமுக பரிசீலனை செய்து வருகிறதாம்.
கோயம்புத்தூர் தொகுதியில் யார் போட்டியிடுவது?: கோயம்புத்தூரில் களமிறங்குவதில் திமுக தீவிரம் காட்டி வருகிறதாம். இதனால்தான் நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா இருக்கையை ஒதுக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசன் கோயம்புத்தூரில் போட்டியிட விரும்பியும் கூட அந்த தொகுதியை திமுக கொடுக்காததற்கு காரணம் இதுவே என்று கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து கோவைக்கு பதிலாக திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற சிபிஎம் கட்சிக்கு வழங்கி உள்ளது. அங்கே சிபிஎம் சார்பாக சச்சிதானந்தம் களமிறக்கப்பட்டு உள்ளார். கோயம்புத்தூரின் முக்கியத்துவத்தையும், தொழில்துறையின் முன்னேற்றம், உளவுத்துறை ரிப்போர்ட் ஆகியவற்றை கருத்தில் கொண்டு திமுகவே இங்கே களமிறங்கும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
பெரும்பாலும் திமுக சார்பாக டாக்டர் மகேந்திரன் இங்கே களமிறக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. ஆனால் வேட்பாளர் தேர்வு இன்னும் உறுதியாகவில்லை. காங்கிரஸ் கோவையில் களமிறங்காத நிலையில் அங்கே திமுக களமிறங்குவது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications