தொகுதிக்கு 3 வேட்பாளர்கள்.. பட்டியலை ரெடி செய்யும் செந்தில் பாலாஜி.. கோவையில் திமுக தீவிரம்!
கோவை: மேற்கு மண்டலமான கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தேர்தல் பொறுப்புகளை செந்தில் பாலாஜி, முத்துசாமி மற்றும் சாமிநாதன் ஆகியோரின் கைகளில் திமுக தலைமை கொடுத்துள்ளது. இம்முறை தென் மாவட்டங்களில் மிஸ்ஸாகும் சில தொகுதிகளை இந்த மாவட்டங்களில் வெல்வதை வைத்து ஈடு செய்ய திமுக கணக்கிட்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கு தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பின், பாஜகவின் பார்வை தமிழ்நாட்டை நோக்கி திரும்பும் என்பதால், களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் திமுக தலைமை தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக கடந்த முறை மிஸ்ஸான மேற்கு மண்டலத்தில் இம்முறை வெல்வது திமுகவின் முக்கிய தேவையாக மாறியுள்ளது.

ஏனென்றால் தென் மாவட்டங்களில் குறையும் சில தொகுதிகளை மேற்கு மண்டலத்தை வைத்து ஈடு செய்யலாம் என்று திமுக தலைமை கணக்கிட்டுள்ளது. அதற்காக திமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு கூடுதல் அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் 39 தொகுதிகளுக்கான பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த முறை கோவையில் ஒரு தொகுதியில் கூட திமுகவால் வெல்ல முடியவில்லை. இதனால் இந்தத் தேர்தலில் கோவை பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். இதனால் செந்தில் பாலாஜியும் சமூக ரீதியிலான வாக்குகளை முதற்கட்டமாக உறுதி செய்ய தொடங்கி இருக்கிறார்.
கோவையை பொறுத்தவரை கொங்கு வெள்ளாள கவுண்டர், நாயுடு, அருந்ததியினர் என்று பல்வேறு சமூக வாக்குகளையும் கைப்பற்ற செந்தில் பாலாஜி தலைமையிலான நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர். கடந்த தேர்தலின் போது மக்கள் நீதி மய்யத்தில் இருந்த மகேந்திரன், இம்முறை திமுக பக்கம் இருக்கிறார். இதனால் தெலுங்கு பேசக் கூடிய நாயுடுகளின் வாக்குகளை கவர மகேந்திரன் செயல்பட்டு வருகிறார்.
இம்முறை மேற்கு மண்டலத்தில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு வருகிறது. அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திமுக கணக்கு போட்டுள்ளது. இதனால் செந்தில் பாலாஜி வேட்பாளர் தேர்வு வரை முடிவு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களை பரிந்துரை செய்து பட்டியலை தயார் செய்து வைத்துள்ளார்.
இறுதியாக திமுக தலைமை வேட்பாளார் யார் என்பதை உறுதி செய்யும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் ஈரோடு மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனின் விலகலோடு, அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலமும் திமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் பெரிய வெற்றியை திமுக எதிர்பார்த்திருக்கிறது.
திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சாமிநாதன் வசம் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு திமுகவில் அண்மையில் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சாமிநாதன் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். இப்படியான நேரத்தில் செங்கோட்டையனின் நீக்கம் கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு சில பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications