உமாசங்கர் மரணத்தில் உள்ள மர்மம் என்ன...சிபிசிஐடி விசாரணை வேணும்...ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை
கோவை : டாக்டர் உமாசங்கர் விபரத்தில் மரணமடைந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை வைக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை காந்திபுரத்தில் உள்ள 'சென்னை மருத்துவமனை'யின் நிர்வாக இயக்குநர் உமாசங்கர், கூலிப்படையினரால் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த 23ஆம் தேதி மதியம் கோவை துடியலூர் கண்ணப்பநகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதியது.

அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்கள் ஏனோ அன்றைய தினம் வேலை செய்யவில்லை. ஆகவே டாக்டர் உமாசங்கர் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். கோவையில் நடந்தது விபத்துதானா என்ற பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இந்த மருத்துவமனை விவகாரத்தில் "வாடகை பாக்கிக்காக" கொடுத்த புகாரில் டாக்டர் உமாசங்கரை மின்னல் வேகத்தில் கைது செய்ய உத்தரவிட்டவர்கள் யார்? ஜாமினில் வெளிவந்து போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்த அவர் எப்படி விபத்து நேர்ந்த அந்த இடத்திலேயே உயிரிழந்தார் - அதில் உள்ள மர்மம் என்ன?
இந்த ஒட்டுமொத்த மருத்துவமனை விவகாரத்திலும்- அதிமுக முக்கிய அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருக்கிறது என்று வரும் செய்திகளையும் புறக்கணித்துவிட முடியாது. இந்நிலையில், மருத்துவர் உமாசங்கர் விபத்தில் மரணம் அடைந்தது குறித்த வழக்கினை கோவை மாநகர போலீஸ் விசாரிப்பது உண்மையை வெளிக்கொண்டு வர உதவி செய்யாது.
ஆகவே, மருத்துவர் உமாசங்கருக்கு ஏற்பட்ட விபத்தை உடனடியாக சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி - நியாயமான விசாரணை நடத்திட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிச்சாமியை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications