கோவையில் யாருக்கும் இரவில் லிப்ட் கொடுத்துறாதீங்க.. கணபதி, சரவணம்பட்டி ரூட்டில் அதிர வைத்த சம்பவம்
கோவை: கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரிடம் லிப்ட் கேட்பதுபோல நடித்து கடத்திச்சென்று பணம் பறித்துள்ளது கும்பல்.. அந்த கும்பல் எப்படி செயல்படுகிறது என்பதை விரிவாக விவரித்த கோவை போலீசார், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என் அறிவுறுத்தியுள்ளனர். சாதாரணமாக லிப்ட் கேட்கும் மர்மநபர், திடீரென பின்னால் கத்தியை காட்டி மிரட்டி, மறைவான இடத்திற்கு அழைத்து செல்வார். அங்கு மர்ம நபர்கள் இருப்பார்கள். அங்கு அடித்து பணத்தை பறிப்பது தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில், ஜவுளி, ஆட்டோ மொபைல், பம்பு செட்டுகள், கனரக வாகன உதிரிபாகங்கள் தொழிற்சாலை, ஏராளமான கல்லூரிகள் அமைந்துள்ளன. இதுதவிர கடந்த10 வருடங்கள் ஏராளமான ஐடி நிறுவனங்கள் கோவையில் கிளைகளை திறந்துள்ளன. கோவையில் அனைத்து வகையான தொழில்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முக்கியமான இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக கோவையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வசிக்கிறார்கள். பெருநகரமாக உருவெடுத்துள்ள கோவையில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்வோர். காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். பலரும் இருசக்கர வாகனங்களில் தான் வேலைக்கு சென்று திரும்புகிறார்கள்.
இந்த நிலையில் கோவை கணபதி பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர் நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வேலை முடிந்து இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்புவது வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் வேலை முடிந்து இரவு 9 மணிக்கு நல்லாம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று சாலை ஓரத்தில் நின்ற நபர் ஒருவர் அந்த வாலிபரிடம் லிப்ட் கேட்டிருக்கிறார். அதை பார்த்ததும் அந்த இளைஞர், இரக்கப்பட்டு.. தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியதுடன், அந்த நபரை தனது வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றபோது பின்னால் இருந்த நபர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த வாலிபர் கழுத்தில் வைத்திருக்கிறார்.
சத்தம் போட்டால் குத்திவிடுவேன், நான் சொல்லும் இடத்துக்கு செல் என்று மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன அந்த இளைஞர், வேறு வழியின்றி அந்த நபர் சொன்ன இடத்துக்கு பயந்தபடியே இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார் தெரு, குறுக்குச்சந்து உள்ளிட்ட பகுதி வழியாக அந்த நபர் போக சொன்னார். அதன்படி அந்த வாலிபரும் தனது இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றிருக்கறிர்
இறுதியாக கணபதி அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதிக்குள் விட சொல்லியிருக்கிறார். அதன்படி அவர் சென்றார். அங்கு 5-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட கும்பல் நின்றிருக்கிறது. அங்கு சென்றதும், அந்த கும்பல், வாலிபரிடம் நகை, பணத்தை உடனடியாக எடுத்துக்கொடு, இல்லை என்றால் உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர், தன்னிடம் நகையோ, பணமோ இல்லை என்று கூறினார்.
அப்போது திடீரென்று கும்பல், அந்த வாலிபரின் வாயை பிளந்து ஒரு மாத்திரையை உள்ளே போட்டு தண்ணீரை ஊற்றியது. அந்த மாத்திரையை அவர் சாப்பிட்டதும், அவருக்கு போதை ஏறியது. உடனே அந்த கும்பல், உனது நண்பர்களின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ஆன்லைன் மூலம் ரூ.50 ஆயிரம் அனுப்ப சொல் என்று மிரட்டியிருக்கிறது. அத்துடன் அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கவும் செய்திருக்கிறார்கள்.
இதனால் காயம் அடைந்த அந்த வாலிபர், தனது நண்பர்களுக்கு போன் செய்து ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்ப சொல்லியிருக்கிறார்.. அந்த பணம் வந்ததும், அந்த கும்பல் வாலிபரின் ஜிபே மூலம் ஸ்கேன் செய்து அந்த பணத்தை தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றிக்கொண்டுள்ளனர். மீதமுள்ள ரூ.30 ஆயிரத்தை கொடுக்கவில்லை என்றால், விடமாட்டோம், மரத்தில் கட்டி வைத்துவிடுவோம் என்று மிரட்டிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் வேறு ஒருவர், அதேப்போன்று மற்றொரு வாலிபரை கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்திருக்கிகறார். உடனே அந்த கும்பல், ரூ.20 ஆயிரத்தை பறித்த வாலிபரின் செல்போனை அவரிடம் கொடுத்துவிட்டு, புதிதாக வந்த வாலிபரிடம் பணம் பறிக்க சென்றது. அந்த நேரத்தில் பணத்தை பறி கொடுத்த வாலிபர் அந்தப்பகுதியில் இருந்து தப்பி ஓடி வந்தார். அந்த பகுதியில் மட்டும் ஒரே நாளில் 3 பேரிடம் இதுபோன்று பணம் பறித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அண்மைக்காலங்களில் கோவையில் கணபதி மற்றும் சரவணம்பட்டி பகுதியில் இரவு 9 மணிக்கு மேல் லிப்ட் கேட்பதுபோல நடித்து கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கடத்திச்சென்று பணம் பறிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே இதுபோன்ற கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே இரவு நேரத்தில் தெரியாத நபருக்கு இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்து சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications