பொங்கல் பண்டிகை வரலாறு தெரியுமா வானதி மேடம் – வெடிக்கும் சமத்துவ பொங்கல் பஞ்சாயத்து
கோவை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் முட்டி மோதி வருகின்றன. பொங்கல் பண்டிகை வாழ்த்தும் அரசியலாகியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் "சமத்துவ பொங்கல்" என்று வாழ்த்து கூறியிருந்தார். இதற்கு வானதி சீனிவாசன், பொங்கல் பண்டிகை இந்துக்கள் மட்டுமே கொண்டாடுவார்கள் என கூறியிருந்தார். இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில், "பாஜக மக்கள் ஒற்றுமையை சிதைக்கிறது" என்று விமர்சித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து, பொங்கல் விழாக்களில் கலந்து கொண்டாடி வருகிறார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய பொங்கல் வாழ்த்தில், "சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல்" என்று கூறியிருந்தார். திமுக சார்பில் சமத்துவ பொங்கல் என்கிற பெயரில் தான் பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறார்கள்.

இந்துக்களை ஸ்டாலின் ஏமாற்றுகிறார்
கோவையில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அந்தக் கட்சியின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், "முதலமைச்சர் ஸ்டாலின் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை. முஸ்லிம் மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடும் பழக்கமே இல்லாதவர்கள். இல்லாத பழக்கத்தை கொண்டு வந்து ஸ்டாலின் சமத்துவ பொங்கல் என்கிற பெயரில் இந்துக்களை ஏமாற்றுகிறார்" என கூறியிருந்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோவை மாவட்ட தலைவர் ந.ராஜா மற்றும் செயலாளர் தினேஷ் ராஜா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்," கோவையில் ஆங்காங்கே பாரதிய ஜனதா கட்சி, 'நம்ம ஊர் மோடி பொங்கல்' என்ற பெயரில் பொங்கல் விழாக்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், கோவையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
சமத்துவ பொங்கல்
அதில் பேசிய அவர், 'தமிழகத்தில் சமத்துவ பொங்கல் என்ற ஒன்று கிடையாது; பொங்கல் என்பது முழுக்க முழுக்க இந்துக்கள் மட்டுமே கொண்டாடும் பண்டிகை; சிறுபான்மையினர் பொங்கலை முறையாகக் கொண்டாடுவதில்லை' என்று தெரிவித்திருக்கிறார். பொங்கல் பண்டிகை என்பது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வியலோடு இணைந்த ஒரு பண்பாட்டு விழாவாகும்.
குறிப்பாக உழவு தொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த இந்த விழா, விவசாயத்திற்கு துணைபுரியும் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் ஒரு பண்டிகையாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், காலங்காலமாக சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி 'சமத்துவ பொங்கல்' வெகுவாகக் கொண்டாடப்பட்டு வருவது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
கண்டனம்
ஆனால், சமத்துவத்தையும் மக்கள் ஒற்றுமையையும் விரும்பாத, மத நல்லிணக்கத்திற்கு எதிரான சனாதனக் கொள்கையைப் பின்பற்றும் வானதி சீனிவாசன் அவர்கள், 'சமத்துவ பொங்கல் வரலாற்றில் கிடையாது' என்று கூறியிருப்பது, சமத்துவத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் வெறுப்பையே காட்டுகிறது. இவ்வாறு தொடர்ந்து சனாதன அரசியலை முன்னிறுத்தி கோவை மக்களின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் சிதைக்கும் சக்திகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோவை மாவட்ட குழு வன்மையாகக் கண்டிக்கிறது" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications